Skip to main content

புல்லட் ரயிலுக்கு டிக்கெட் உங்க பணமா? - அண்ணாமலை 

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Annamalai Reply to cm Stalin's Comment on Bullet Train

 

8 நாள் அரசு முறைப் பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனு ஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து தனது இரண்டு நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு புல்லட் ரயிலில் பயணித்துள்ளார். 

 

அது தொடர்பாக புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர், “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் முதல்வர் புல்லட் ரயில் குறித்து பேசியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நான் புல்லட் ரயிலில் போகிறேன்; இந்தியாவிற்கும் அதை கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். நாங்களும் புல்லட் ரயிலில் சென்றிருக்கிறோம்; அதில் ஒரு டிக்கெட்டின் விலை என்னவென்று தெரியுமா? புல்லட் ரயிலில் ஒரு டிக்கெட் விமான டிக்கெட்டின் விலையில் 80 சதவீதம் இருக்கும். ஏன் முதல்வர் அதை சொல்லவில்லை. வந்தே பாரத்தின் டிக்கெட்டின் விலை சாதாரண சாமானியன் பயன்படுத்தும் ஆட்டோவில் போகும் விலை போன்று இருக்கிறது. சென்னை - கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 3 மாதத்திற்கு டிக்கெட்டே இல்லை. நான் ஒருவரிடம் கேட்டேன் எப்படி அண்ணா மூன்று மாதத்திற்கு முன்பே புக் பண்றீங்க என்று? அதற்கு அவர் சும்மா எப்படி இருக்கு என்று பாத்துட்டு வரலாம்னு புக் பண்ணேன் என்கிறார்.

 

ஆக அந்த அளவிற்கு வந்தே பாரத் ரயில் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. காட்சிக்கு மட்டும் புல்லட் ரயில் மாதிரி இல்லாமல், முழுமையாகவும் புல்லட் ரயில் வரவேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். மும்பை டூ அகமதாபாத் புல்லட் ரயில் வரவுள்ளது. பிரதமர் மோடியின் மேக் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்தையும் கொண்டு வந்து, அதன் விலையை குறைத்து சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. நீங்கள் செல்லும் புல்லட் ரயிலில் டிக்கெட்டுக்கு பணம் உங்களுடையது இல்லை. எங்களுடைய பணத்தில்தான் நீங்கள் புல்லட் ரயிலில் பயணம் செய்கிறீர்கள். உங்களுடைய அதிகாரி டிக்கெட் எடுக்கிறார். அதை வைத்து நீங்கள் பயணம் செய்கிறீர்கள். ஆனால் நாங்க பூ விற்பவர்கள், மாங்கா விற்பவர்கள், தேங்கா விற்பவர்களை எல்லாம் எப்படி புல்லட் ரயிலில் அழைத்துச் செல்லலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

 

பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்த சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயிலில் எக்னாமிக் க்ளாசில் ரூபாய் 1365 என்பதும் சாதாரண ரயிலில் கோவை டூ சென்னை ரூ.325 என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.