Skip to main content

பிரியா பெயரில் பாஜக நடத்தும் கால்பந்தாட்டம் - அண்ணாமலை பேட்டி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

 Annamalai interview conducted by BJP in the name of Priya

 

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்புக் காரணமாக நவ. 8-ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

 

அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று முன்தினம் (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

 

 

மாணவியின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியையும் வழங்கினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீராங்கனையின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''சகோதரி பிரியாவின் நிலைமை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. இப்பொழுதுதான் அவருக்குப் பிறந்தநாள் முடிந்திருக்கிறது. ஒரு பெரும் கனவைச் சுமந்துகொண்டு கால்பந்தாட்ட வீரராக இருந்த அவருக்குக் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாகக் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்து, அதன் காரணமாக அவர் இறந்திருப்பது நம்முடைய மாநிலத்தில் இதுபோன்ற ஒன்றைப் பார்த்தது கிடையாது.

 

 Annamalai interview conducted by BJP in the name of Priya

 

குறிப்பாக மருத்துவ கட்டமைப்பு என்பது இந்தியாவிலே மிக ஆழமாக, மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வரின் தொகுதியில் இருப்பது வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அரசு என்னதான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாலும் இன்று பல அரசு மருத்துவமனைகள் இந்த நிலையில்தான் இருக்கிறது. வீராங்கனை பிரியாவின் இறப்பு மீடியாக்கள் மூலமாக வெளியே வந்திருக்கிறது. இதைத் தமிழகம் முழுவதும் பேசுகிறோம். ஆனால் இதேபோல் எத்தனை எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் நிர்வாகக் கோளாறு காரணமாக ஏற்படும் பல இறப்புக்கள் வெளியே வருவதில்லை. இதனை எல்லாம் உடனடியாக அரசு இரும்புக்கரம் கொண்டு எப்படி தமிழகத்தில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய பெயர் இருந்ததோ, அதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

 

பிரியா தந்தை சொன்னார், பிரியாவுக்கு பிரதமர் மோடியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. “அப்பா நான் பெரிய கால்பந்தாட்ட வீராங்கனையாக மாறிய பிறகு என்னை மோடியிடம் கூட்டிக்கொண்டு போங்க. நான் என்னுடைய பதக்கங்களை அவரிடம் காட்ட வேண்டும், அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்” என்று உள்ளே சொன்னார்கள். இன்று ஒரு தந்தையாக என்னால் இதை நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். இன்னும் ஐந்து நாட்களில் பாஜக நிர்வாகிகள் உங்கள் வீட்டுக்கு மீண்டும் வருவோம். இந்திய அணியின் கால்பந்தாட்ட கேப்டன் ராமன் விஜயன் அவர்கள் தலைமையில் பாஜக நிர்வாகிகள் இங்கே வந்து இரண்டு விஷயங்களை இன்னும் ஐந்து நாட்களில் செய்வதாக உறுதி அளித்திருக்கிறோம். பிரியாவின் பெயர் சென்னை மாநகரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பாஜக இந்த மழைக்காலம் முடிந்தவுடன் பிரியா பெயரில் சென்னை முழுவதும் ஒரு கால்பந்தாட்ட போட்டியை மிகப்பெரிய அளவில் நடத்திக் காட்டப் போகிறோம். அதேபோல் பிரியாவின் சகோதரர்கள் மூன்று பேர் கால்பந்தாட்டம் விளையாடுகிறார்கள். அவர்கள் கை காட்டுகின்ற பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கால்பந்தாட்ட பயிற்சி வழங்குவதற்கான முழுச் செலவையும் பாஜக ஏற்கும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.