ADVERTISEMENT

“நான் ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை.. ஆனால் அவர் ஏ1..” - அண்ணாமலை

05:31 PM Jun 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய அண்ணாமலை, “நான் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவறாக புரிந்துகொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து ஊழலை எதிர்த்தும் ஊழலுக்கு எதிராக போராடியும் வருகிறேன். அவர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தது போல் நான் செய்யமாட்டேன். ஆங்கில நாளிதழில் நான் கூறியிருந்தது, ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதனை மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். அதுதான் ஆக்கப்பூர்வமான அரசியல் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.

அதே நேரத்தில் மாண்புமிகு ஜெயலலிதா அம்மாவை பற்றி தொடர்ந்து பல இடங்களில் பேசியிருக்கிறேன். கடந்த மூன்று, நான்கு வருடங்களாக மாண்புமிகு அம்மாவின் ஆளுமை குறித்து பேசியிருக்கிறேன். அவர் ஏழை மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பற்றி பேசியிருக்கிறேன். இதெல்லாம் வீடியோவாக பதிவாகியிருக்கிறது. வேண்டுமென்றால் அதனைப் பாருங்கள். நான் யாரை பற்றியும் தவறாகவும், தரக்குறைவாகவும் பேசவில்லை. ஒரு பேட்டியில் நான் கூட சொல்லியிருக்கிறேன், ஜெயலலிதா அம்மையாரை போல சிறந்த ஆளுமைமிக்க தலைவராக வரவேண்டும் என்று. ஆனால் அதற்கு சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். அப்படி இருக்கும் நான் அவரை அவமானப்படுத்தி விட்டேன் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் அவரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. என்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்தியாவில் இரண்டு முறை எந்த மாநிலத்தின் தலைமை செயலகத்திலும் சோதனைகள் நடைபெற்றதில்லை. ஆனால் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்தளவிற்கு ஊழல் என்பது தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. அதனைத்தான் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். கூட்டணியில் இருந்தாலும் இதனைத்தான் பேசி வருகிறேன். என்னுடைய கொள்கையில் எந்த விதமான மாற்றமுமில்லை. அதனால் கூட்டணியில் இருப்போம், மற்றவர்களை மதிப்போம். நடந்த விஷயத்தை கூறியிருக்கிறேன். யாரையும் தவறாகக் கூறவில்லை. ஜெயலலிதா அம்மையாரின் ஆளுமை குறித்து பாராட்டிப் பேசியிருக்கிறேன்.

ஆனால் வழக்கில் அவரை ஏ1 என்று குறிப்பிட்டுள்ளார்கள். பலரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லலாம். அதற்குள் நான் போக விரும்பவில்லை; அது என் வேலையுமில்லை. அவர் மறைந்துவிட்டார். அவரை பற்றி பேசுவது சரியாக இருக்காது. எந்த இடத்திலும் நான் அவரை தவறாகக் குறிப்பிடவில்லை. அப்படி பேசுவதற்கு எனக்கு தகுதியும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலை பற்றி தான் பேசியிருக்கிறேன். அவரை பற்றியும் எதுவும் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT