Skip to main content

“நான் ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை.. ஆனால் அவர் ஏ1..” - அண்ணாமலை

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

annamalai explain about jayalalitha

 

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

இந்த நிலையில் இது குறித்து பேசிய அண்ணாமலை, “நான் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவறாக புரிந்துகொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து ஊழலை எதிர்த்தும் ஊழலுக்கு எதிராக போராடியும் வருகிறேன். அவர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தது போல் நான் செய்யமாட்டேன். ஆங்கில நாளிதழில் நான் கூறியிருந்தது, ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதனை மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். அதுதான் ஆக்கப்பூர்வமான அரசியல் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.

 

அதே நேரத்தில் மாண்புமிகு ஜெயலலிதா அம்மாவை பற்றி தொடர்ந்து பல இடங்களில் பேசியிருக்கிறேன். கடந்த மூன்று, நான்கு வருடங்களாக மாண்புமிகு அம்மாவின் ஆளுமை குறித்து பேசியிருக்கிறேன். அவர் ஏழை மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பற்றி பேசியிருக்கிறேன். இதெல்லாம் வீடியோவாக பதிவாகியிருக்கிறது. வேண்டுமென்றால் அதனைப் பாருங்கள். நான் யாரை பற்றியும் தவறாகவும், தரக்குறைவாகவும் பேசவில்லை. ஒரு பேட்டியில் நான் கூட சொல்லியிருக்கிறேன், ஜெயலலிதா அம்மையாரை போல சிறந்த ஆளுமைமிக்க தலைவராக வரவேண்டும் என்று. ஆனால் அதற்கு சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். அப்படி இருக்கும் நான் அவரை அவமானப்படுத்தி விட்டேன் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

நான் அவரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. என்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்தியாவில் இரண்டு முறை எந்த மாநிலத்தின் தலைமை செயலகத்திலும் சோதனைகள் நடைபெற்றதில்லை. ஆனால் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்தளவிற்கு ஊழல் என்பது தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. அதனைத்தான் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். கூட்டணியில் இருந்தாலும் இதனைத்தான் பேசி வருகிறேன். என்னுடைய கொள்கையில் எந்த விதமான மாற்றமுமில்லை. அதனால் கூட்டணியில் இருப்போம், மற்றவர்களை மதிப்போம். நடந்த விஷயத்தை கூறியிருக்கிறேன். யாரையும் தவறாகக் கூறவில்லை. ஜெயலலிதா அம்மையாரின் ஆளுமை குறித்து பாராட்டிப் பேசியிருக்கிறேன்.

 

ஆனால் வழக்கில் அவரை ஏ1 என்று குறிப்பிட்டுள்ளார்கள். பலரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லலாம். அதற்குள் நான் போக விரும்பவில்லை; அது என் வேலையுமில்லை. அவர் மறைந்துவிட்டார். அவரை பற்றி பேசுவது சரியாக இருக்காது. எந்த இடத்திலும் நான் அவரை தவறாகக் குறிப்பிடவில்லை. அப்படி பேசுவதற்கு எனக்கு தகுதியும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலை பற்றி தான் பேசியிருக்கிறேன். அவரை பற்றியும் எதுவும் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.