Skip to main content

“இரட்டை இலை சின்னம் முடக்கம்” - எம்.பி தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் பா.ஜ.க!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

புதுச்சேரி யூனியன் பிரதேச நிகழ்ச்சிகளுக்காக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிக்குச் செல்லும் வழியில் சென்னை ஆவடியில் ஓரிரவு (23-ந் தேதி) தங்கினார். அது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய அமைச்சர் முருகன் ஆகியோரிடம் ஆலோசித்தார் அமித்ஷா. ஆலோசனை விவகாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

 

நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக அடுத்த வருட துவக்கத்திலிருந்தே சில முடிவுகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டியதிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது. நாம் தனித்துப் போட்டியிடலாமா? இப்போதிருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? என்று 3 கேள்விகளை கேட்டிருக்கிறார் அமித்ஷா.

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

அதற்கு அண்ணாமலை, "நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இப்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரலாம்'' எனச் சொல்ல, "அ.தி.மு.க.வுடன் கூட்டணின்னா அது பா.ஜ.க. தலைமையில் எப்படி அமையும்? அதற்கு அ.தி.மு.க. ஒப்புக்கொள்ளுமா?'' என சி.டி.ரவி கேட்க, "இப்போதைய அ.தி.மு.க. பலவீனமாக இருக்கிறது. அவர்களுக்கும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதனால், 50:50 சீட் ஷேரிங்கில் அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்'' என்றிருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.தான் அண்ணாமலையின் சாய்ஸ். கேசவவிநாயகமோ, "தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்கணும்னா அ.தி.மு.க. வலிமையாகனும். ஆனா, அது அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் லாபம். தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை தவிர்த்து ஒரு வலிமையான வேறு ஒரு கட்சி இங்கு இல்லை. இருந்தால் ஒருவேளை மக்களின் மனம் மாறலாம். அதனால் அ.தி.மு.க. பலவீனமாகி பா.ஜ.க. பலமாக தெரிந்தால் மட்டுமே தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

இந்த சூழலில் பேசிய சுதாகர் ரெட்டி, "அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. போட்டியிடும்போதுதான் கணிசமான வெற்றி கிடைக்கிறது. அதனால், தனித்துப் போட்டியிடலாம். அந்த முடிவை எடுத்தால், இரட்டை இலையை முடக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு பலமே அதன் சின்னம்தான். அ.தி.மு.க. பலவீனமாகிவிட்டால் பா.ஜ.க. பக்கம் மக்கள் திரும்ப வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

இதனை உன்னிப்பாகக் கவனித்த அமித்ஷா, "இன்னும் ஆழமாக யோசிங்க. உங்கள் யோசனைகளை ஒரு ரிப்போர்ட்டாக கொடுங்கள்'' என்றிருக்கிறார். பின்னர் அமித்ஷாவை தனியாக சந்தித்து, தமிழக அரசின் சுகாதாரம், மின்சாரம், நெடுஞ்சாலை, இந்து சமய அறநிலை, தொழில், பத்திரப்பதிவு, நகராட்சி நிர்வாகம், கனிமவளம் உள்ளிட்ட துறைகளில் தி.மு.க.வுக்கு எதிராக தனக்கு கிடைத்த மெட்டீரியல் எவிடென்ஸ்களை அமித்ஷாவிடம் விவரித்திருக்கிறார் அண்ணாமலை. முதல்வர் குடும்ப நபர்களின் ஆதிக்கம் குறித்தும் பேசியிருக்கிறார்.

 

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்கும் அசைன்மெண்ட்டை பா.ஜ.க.வும் சசிகலா தரப்பும் தனித்தனி ரூட்டில் தொடங்கிய பணிகள் தொய்வடைந்திருக்கிறது. இவர்களிடம் சிக்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தி.மு.க.வின் வலையில் விழுந்துள்ளனர். அமைச்சர்கள் ஏ.வ.வேலு, செந்தில்பாலாஜி, சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிடியில் அந்த 22 எம்.எல்.ஏ.க்களும் இருப்பதாக தி.மு.க. தரப்பில் எதிரொலிக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.