
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் நேற்று (11-05-25) பாமகவின் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. இம் மாநாட்டில் பாமக சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டு மேடையில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “இந்தியாவில் ஓபிசி இட ஒதுக்கீடு பெற்று தந்தது இரண்டு பேர். ஒன்று ஆணைமுத்து, மண்டல் கமிஷனை கொண்டு வந்தது. அடுத்தது, நம்முடைய ராமதாஸ் இல்லை என்றால் இன்று இந்திய அளவில் ஓபிசிக்கு கல்வியிலே 27 விழுக்காடு இன்று வரைக்கும் வந்திருக்காது. ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் அந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டு, சோனியா காந்தியை பார்த்து நீங்கள் இட ஒதுக்கீடு கொண்டு வருவீர்களா? இல்லையா? இல்லை என்றால் நாங்கள் இந்த கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்று ஆவேசமாக பேசினார். சோனியா காந்தி, ராமதாஸை பார்த்து டாக்டர் கூல் டவுன் பண்ணுங்க அமைதியா இருங்க பேசிக்கலாம் என்று சொன்னார்.
அதன் பிறகு அன்று மாலை மீண்டும் சந்தித்து சோனியா காந்தி முடிவெடுத்தார். ராமதாஸ் அழுத்தத்தால் இந்தியாவில் ஓபிசிக்கு கல்வி நிலையத்தில் 27% இட ஒதுக்கீட்டை அறிவித்தார் சோனியா காந்தி. எவ்வளவு பெரிய வரலாறு, இது யாருக்காவது தெரியுமா? அருந்ததிகளுக்கு 3 விழுக்காடு, இஸ்லாமியர்களுக்கு மூன்றரை விழுக்காடு, எம்பிசி 20 விழுக்காடு, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு, மத்தியில் மருத்துவத் துறையில் பட்டியலின மக்கள் பழங்குடி மக்களுக்கு 22.5% இடஒதுக்கீடு, இதர பிற்படுத்த மக்கள் ஓபிசிக்கு 27% இதுதான் வரலாறு.
ஆனால், அந்த அளவுக்கு ராமதாஸுக்கு அங்கீகாரம் இருக்கிறதா? இந்த சமுதாயத்தில் பிறந்ததால் அது இல்லை. தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம், இன்றைக்கு படிப்பறிவு இல்ல குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது, கூலி வேலை செய்து கொண்டிருக்கிறது, விவசாயம் செய்து கொண்டிருக்கிறது, எந்த தொழிலும் கிடையாது. இந்த சமுதாயத்தை ஆண்டுகொண்டிருக்கின்ற கட்சிகள் எல்லாம் வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நம்மை எல்லால் வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்துகிறார்கள்” என்று பேசினார்.