நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. இதில் பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. பாமக போட்டியிட்ட 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அன்புமணியும் தோல்வியை சந்தித்தார். இதனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த தோல்வியால் அதிமுகவில் ராஜ்யசபா சீட் பாமகவுக்கு கொடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே அறிவித்த படி பாமகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் பாமகவில் இருந்து அன்புமணிக்கு கொடுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்ததால் பாப்பிரெட்டிபட்டி, அரூர் மற்றும் சோளிங்கர் , ஆகிய மூன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடிந்தது. மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றில் அக்கட்சியின் ஆதரவு முக்கியம் என்பதாலும் அதிமுக இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.