Skip to main content

காட்டிக் கொடுத்த ஸ்டாலினுக்கு இதுபற்றி பேச அருகதை இல்லை... அன்புமணி ராமதாஸ்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி மக்களிடம் ஆலோசனை நடத்தி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று  சென்னை&  சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடில்லை. இத்திட்டம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

 

 mkStalin


 

சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில், புதிதாக 8 வழிச்சாலை தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இந்த திட்டத்திற்காக 7000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்; 10,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான் அத்திட்டத்தை பா.ம.க. தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. இந்த காரணத்திற்காகத் தான் பாதிக்கப்படவுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தான் 8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். போராடிப் பெற்ற இந்தத் தீர்ப்பின் மூலம் 5 மாவட்ட உழவர்களையும் பாமக பாதுகாக்கும்; ஒருபோதும் 8 வழிச்சாலை அமைக்கப்படாது.

 

சேலம் கூட்டத்தில் பேசிய நிதின்கட்கரி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற அடிப்படையில் தான் 8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழக மக்களிடையே அத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் கூறிவிட்டார் என்பதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடாது. அதுமட்டுமின்றி, 8 வழிச்சாலைத் திட்டம் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்; அது அரசின் கடமை என்று முதலமைச்சர் கூறியுள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது சாத்தியமல்ல.

 

மேலும், 8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்கரிக்கு புரிய வைப்போம். வாணியம்பாடியிலிருந்து சேலம் செல்லும் 179&ஏ எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் ரூ.515 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழிச்சாலைக்கு தேவை இருக்காது என்பதால்  இத்திட்டம் தேவையில்லை என்பதை நிதின்கட்கரியிடம் எடுத்துக் கூறி திட்டத்தை கைவிட வைப்போம்.

 

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், நிதின்கட்கரியின் அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மேடையிலேயே தடுத்து நிறுத்தாதது ஏன்? என்று கூறி வழக்கம் போலவே தடித்த வார்த்தைகளில் விமர்சித்துள்ளார். ஒரு மேடையில் ஒரு கட்சியின் தலைவர் பேசும் போது அதில் குறுக்கிடாமல் இருப்பது தான் மேடை நாகரிகமாகும். இந்தியாவில் எங்கும் ஒரு கட்சித் தலைவரின் பேச்சை இன்னொரு கட்சித் தலைவர் தடுத்து நிறுத்துவது நடக்காது.


 

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சேவை சந்தித்து, எமது சொந்தங்களை இனப் படுகொலை செய்தது ஏன்? என்று கேள்வி கேட்காமல், மேடை நாகரிகம் என்ற பெயரில் அவர் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பெட்டியை பல்லிளித்துக் கொண்டே வாங்கி வந்த திமுக& காங்கிரஸ் கூட்டணிக்கு இதுபற்றி பேச தகுதி இல்லை. ஸ்டாலினின் தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தோல்விக்கடலில் தத்தளிக்கும் அவர், ஏதாவது துரும்பு கிடைக்காதா? அதைப் பிடித்து கரையேறிவிட முடியாதா? என்று துடித்துக் கொண்டுள்ளார். 8 வழிச் சாலைத் திட்டத்தில் உழவர்களைக் காட்டிக் கொடுத்த ஸ்டாலினுக்கு இதுபற்றி பேச அருகதை இல்லை.

 

சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்தவும், அதனால் பாதிக்கப்படும் உழவர்கள் நலனை பாதுகாக்கவும் மு.க.ஸ்டாலின் இதுவரை செய்தது என்ன? சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும்,‘‘தமிழகத்தின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலைத் திட்டம் மிகவும் அவசியம். அந்தத் திட்டத்தை வரவேற்கிறேன்’’ என்று கூறி உழவர்களுக்கு துரோகம் செய்தவர் தான் ஸ்டாலின்.

 

8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து ஏதேனும் ஒரு முறையாவது ஸ்டாலின் போராட்டம் நடத்தியிருப்பாரா? ஒரு முறையாவது மக்களைச் சந்தித்து கருத்துக் கேட்டிருப்பாரா? வழக்குத் தொடர்ந்திருப்பாரா? போராடும் மக்களுக்கு தார்மீக ஆதரவையாவது தெரிவித்திருப்பாரா? இப்படி எதையுமே செய்யாத ஸ்டாலினுக்கு இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது.


 

anbumani ramadoss



மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ராகுல் காந்தி, கர்நாடகத்திற்கு சென்று தமிழகத்திற்கு எதிராக விஷம் கக்கி வருவது ஸ்டாலினுக்கு தெரியாதா? மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று ராகுல் கூறுகிறார். ஸ்டாலினுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்திருந்தால் ராகுல் காந்தியை கண்டித்திருக்க வேண்டும். அதை அவர் செய்தாரா? தமிழ்நாட்டு உழவர்களுக்கும் ஸ்டாலின் எதையும் செய்ய மாட்டார்; தமிழக உழவர்களுக்கு எதிராக பேசும் ராகுல் காந்தியையும் கண்டிக்க மாட்டார். ஆனால், தமிழகத்தில் சட்டப்போராட்டமும், அரசியல் போராட்டமும் நடத்தி நீதி பெற்றுத் தந்த பா.ம.க.வை மட்டும் ஸ்டாலின் விமர்சிப்பாராம். ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டத்தின் நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.

 

திமுக எப்போதும் உழவர்கள் நலனுக்கு எதிரானது. அதனால் தான் துணை நகரத் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு அருகில் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களைப் பறித்து, 13 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்றத் துடித்தது. ஆனால், அதை மருத்துவர் அய்யா அவர்கள் தான் போராட்டம் நடத்தித் தடுத்தார். அதைப் போலவே, 8 வழிச்சாலைத் திட்டத்தையும் தடுத்து, 5 மாவட்ட விவசாயிகளின் நலன்களை மருத்துவர் அய்யாவும், நானும் பாதுகாப்போம். எனவே, உழவர்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.