Skip to main content

8 வழிச்சாலைத் திட்டம் ரத்து: பா.ம.க, விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! அன்புமணி

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

 

சென்னை & சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இத்தீர்ப்பு 5 மாவட்ட உழவர்கள் நலனைக் காப்பதற்காக பா.ம.க சார்பில் நான் மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கும், உழவர்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

மேலும், சென்னை & சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் சேலம் நகருக்கும் இடையே வலிமையான, வசதியான சாலைக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. 

 

anbumani ramadoss



ஆனால், சென்னையிலிருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என  இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திண்டிவனம், -கிருஷ்ணகிரி வழியாக மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மாநில சாலைகளும் உள்ளன. இவ்வளவும் போதாதென சேலத்திற்கு புதிதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன? என்ற வினாவை பா.ம.க. தொடர்ந்து எழுப்பி வந்தது. இந்தத் திட்டத்திற்காக 7000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால் 10 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தொடர்ந்து கூறி வந்தது. இத்திட்டத்தை எதிர்த்து பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

 

அதுமட்டுமின்றி, இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். இந்த வழக்கைத் தொடர்ந்த சில வாரங்களில் 8 வழிச்சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது இத்திட்டத்திற்கு முழுமையானத் தடை விதிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

பாட்டாளி மக்கள் கட்சி உழவர்களுக்கான கட்சி. உழவர்கள் நலனுக்காக இதுவரை எத்தனையோ விஷயங்களில் அரசியல் போராட்டங்ளையும், சட்டப் போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. அதே எண்ணத்துடனும், உணர்வுடனும் தான் இந்தத் திட்டத்தை எதிர்த்தும் பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் எனக்கு கிடைத்துள்ள வெற்றியை உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களாக நான் மதிக்கும் உழவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். பா.ம.க. உழவர்களுக்கான கட்சி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை&சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கான அறிவிக்கையை ரத்து செய்துள்ள உயர்நீதிமன்றம், இத்திட்டம் குறித்து உழவர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று இத்திட்டம் குறித்து முடிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது. ஆனால், பசுமைவழிச் சாலைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இந்த நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகளிடம் பா.ம.க. வலியுறுத்தும்; வெற்றி பெறும். 

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு  செய்யக்கூடாது. இந்த வழக்கில் உழவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் எனது சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும். சென்னை& சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் உழவர்களின் நலன்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க எடுக்கும்.

 

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக ஏற்கனவே உள்ள சாலைகள் தவிர, வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்திற்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179- ஏ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் ரூ.521 கோடியில் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழி பசுமைச்சாலைக்கு தேவையே இருக்காது.

 

அதேநேரத்தில் 8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 8 வழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக திமுக ஒரு துரும்பைக் கூட அசைக்க வில்லை. சட்டப்பேரவையில் கூட, 8 வழிச்சாலைத் திட்டத்தை  நாங்கள் எதிர்க்க வில்லை; மக்களிடம் கருத்துக்கேட்டுவிட்டு திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என்று சொல்லியவர் தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, உழவர்களை பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கூடாது; செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டவர் திமுக தலைமை நிலைய வழக்கறிஞர் வில்சன்  என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

 

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு என்றாலும், 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான வழக்கு என்றாலும் வெளியில் நல்லவர்களைப் போல நடிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் திரைமறைவிலும், நீதிமன்றங்களிலும் மக்கள் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்கள். அனைத்து சிக்கல்களிலும் இரட்டை வேடம் போடுவது தான் அவர்களின் வழக்கம். அந்த இரட்டைவேட துரோகக் கூட்டணிக்கு  வரும் மக்களைவைத் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். இது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Case against Nayanar Nagendran High Court action order

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

Case against Nayanar Nagendran High Court action order

இந்நிலையில் இந்த முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான நிரஞ்சன், “இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.