Skip to main content

நீட் தேர்வு : தமிழக அரசு செலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்: அன்புமணி

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
anbumani ramadoss

 

 

தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்குவது சமூக அநீதி என்றும், மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சரி தான் என்றும் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது  என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நடைமுறைக்கு சாத்தியமற்ற செயலை மாணவர்கள் செய்தே தீர வேண்டும் மத்திய அரசு கட்டாயப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
 

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு உள்ளூரில் தேர்வு மையம் ஒதுக்குவதற்கு பதிலாக கேரள மாநிலம் எர்ணாகுளம், இராஜஸ்தான் மாநிலம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மாநிலம் விட்டு, மாநிலம் சென்று நீட் தேர்வில் பங்கேற்பதில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதால், தமிழகத்திலேயே அவர்களுக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்  என்று நீட் தேர்வுகளை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அண்மையில் ஆணையிட்டிருந்தது.
 

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் நியாயமானது; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கம் கொண்டது. இத்தீர்ப்பை செயல்படுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுதுவதை உறுதி செய்திருக்க வேண்டியது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கடமையாகும். இதில் எந்த சிரமமும் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் சுமார் 200 பேருக்கு  மட்டுமே வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இரு தேர்வு மையங்களின் கொள்ளளவை தலா 100 இருக்கைகள் வீதம் அதிகரித்தால் போதுமானது. ஆனால், சமூக நீதியை நிலை நிறுத்துவதற்கான இந்த நடவடிக்கையைக் கூட செய்வதற்கு மத்திய அரசின் கல்வி வாரியம் தயாராக இல்லை. மாறாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை வாங்கியுள்ளது. இது சமூக அநீதி.
 

 தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளத்துக்கும், இராஜஸ்தானுக்கும் சென்று நீட் சென்று தேர்வு எழுதுவது எளிதான காரியம் அல்ல. தொடர்வண்டியில் இரு நாட்கள் பயணம் செய்து தான் இராஜஸ்தான் செல்ல வேண்டும். பயணச் செலவு, தங்குமிடச் செலவு ஆகியவற்றை ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களால் தாங்க முடியாது. இதையெல்லாம் விட இராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களால் இதை நிச்சயமாக தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் அவர்களுக்கு உடல்நலன் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இராஜஸ்தான் சென்று தான் தேர்வெழுத வேண்டும் என்று மத்திய அரசு  பிடிவாதம் பிடிப்பதும், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்களாகும்.
 

இந்த விஷயத்தில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சிக்கல் முதன்முதலில் தெரியவந்ததுமே இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காத தமிழக அரசு,  இப்போது இவ்விஷயத்தில் எதையும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டது. தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்தவித கடமையுணர்வும், பொறுப்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இராஜஸ்தானில் தான் நீட் தேர்வு எழுத வேண்டுமென்றால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும் வாய்ப்புள்ளது.
 

எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்த வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் இராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களை அழைத்துச் சென்று வர பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'60 ஆண்டுகால வெறுப்பு இருக்கிறது' - பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'There is 60 years of hatred' - Pamaka Anbumani Ramadoss interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டின் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவுக்குப் பிறகு 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான ஒரு சூழல் இருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி. பிரதமர் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்றார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சேலத்தில் நடக்க இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் தற்போது கூட்டணியில் இணைந்துள்ள பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

ஆவணத்தில் திடீர் சந்தேகம்; தனி அறைக்கு கூட்டிச்சென்று டவுட் கேட்ட ராமதாஸ்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Sudden doubt in the document; Ramdas went to a private room and asked for a dowt

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில்  நேற்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.

நேற்று வரை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, எடுத்த இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

பாமக-பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த சில நிமிடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி ஒப்பந்தத்திற்கான ஆவணத்தை படித்துப் பார்க்கையில், அதில் அவருக்கு சில சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து விளக்கம் கேட்க பாஜக தலைவரை தனி அறைக்கு பாமக ராமதாஸ் கூட்டிச் சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மக்களவை தேர்தலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.