தினகரன் கட்சியில் முக்கிய நபர்களாக வலம் வந்த தங்கத்தமிழ்செல்வன்,செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா வெளியேறியது அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே போல் கடந்த வாரம் புதுச்சேரி நிர்வாகிகள் பலர் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி தினகரனை திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூட இவர் இல்லை என்று பேசுவது போல் இருந்தது.
இதனையடுத்து தினகரனுக்கும், சசிகலாவுக்கும் வலது கரமாக இருந்த புகழேந்தி அக்கட்சியில் இருந்து வெளியேற போகிறர் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தினகரனின் நடவடிக்கை சமீப காலமாக சசிகலாவிற்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் புகழேந்தியை கட்சியை விட்டு அனுப்ப சசிகலாவிற்கு விருப்பம் இல்லை என்றும் கூறுகின்றனர். அதனால் சசிகலா வெளியே வரும் வரை புகழேந்தி வேறு எந்த கட்சிக்கும் போகமாட்டார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே முன்பு போல் நட்புறவு இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகின்றனர். ஒரு வேளை கட்சியை விட்டு வெளியேறினால் கர்நாடகாவில் இருக்கும் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு அதிகம் என்கின்றனர். தற்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால் ஆளுங்கட்சியான பாஜகவில் இணையலாம் என்றும் சொல்லப்படுகிறது.