Skip to main content

பாஜகவில் இணையப் போகிறாரா புகழேந்தி?

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

தினகரன் கட்சியில் முக்கிய நபர்களாக வலம் வந்த தங்கத்தமிழ்செல்வன்,செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா வெளியேறியது அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே போல் கடந்த வாரம் புதுச்சேரி நிர்வாகிகள் பலர் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி தினகரனை திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூட இவர் இல்லை என்று பேசுவது போல் இருந்தது. 
 

ammk



இதனையடுத்து தினகரனுக்கும், சசிகலாவுக்கும் வலது கரமாக இருந்த புகழேந்தி அக்கட்சியில் இருந்து வெளியேற போகிறர் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தினகரனின் நடவடிக்கை சமீப காலமாக சசிகலாவிற்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் புகழேந்தியை கட்சியை விட்டு அனுப்ப சசிகலாவிற்கு விருப்பம் இல்லை என்றும் கூறுகின்றனர். அதனால் சசிகலா வெளியே வரும் வரை புகழேந்தி வேறு எந்த கட்சிக்கும் போகமாட்டார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே முன்பு போல் நட்புறவு இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகின்றனர். ஒரு வேளை கட்சியை விட்டு வெளியேறினால் கர்நாடகாவில் இருக்கும் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு அதிகம் என்கின்றனர். தற்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால் ஆளுங்கட்சியான பாஜகவில் இணையலாம் என்றும் சொல்லப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.