Skip to main content

அதிமுக ஐ.டி விங் நிர்வாகியை தாக்கிய அமமுக பிரமுகர்! 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

AMMK Memeber who hit ADMK IT wing executive!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக கனமழை பெய்து, 10 வருடங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் உள்ள ஏராளமான கண்மாய்கள், ஏரி, குளங்கள் நிரம்பி, உடைப்பெடுத்து காட்டாறுகள் சென்றுகொண்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அதிகாரிகளே போக்குவரத்தை தடை செய்துள்ளனர். மேலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்புகள் வெளிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் நிரம்பியுள்ள ஏரி குளங்களை விஜயபாஸ்கர் சென்று பார்த்துவருகிறார். நேற்று (28.11.2021) குளத்தூர் பெரிய கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்க விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவினர் சென்றனர். அப்போது விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் பிரபாகரனும் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். இருவரும் ஒன்றாக ஏரியைப் பார்த்தனர்.

 

AMMK Memeber who hit ADMK IT wing executive!

 

அந்த சந்திப்பு பற்றி அதிமுக ஐ.டி. விங் சமூகவலைதளங்களில் சிலர் அமமுகவினருக்கு எதிரான பதிவுகளைப் போட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமமுக பிரமுகர் தாக்கியதில் அதிமுக ஐ.டி. விங் ஆறுமுகம் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

இது சம்மந்தமாக புகார் வேண்டாம் என்று இருதரப்பினரும் சமாதானப் பேச்சுவாராத்தையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கருத்தறிய ஆறுமுகத்தை தொடர்புகொண்டபோது, சிறிது நேரத்தில் பேசுவதாக கூறியவர் பிறகு தொடர்பில் வரவில்லை. இந்த சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக - அமமுக இணைவதை தொண்டர்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.