Skip to main content

விபரீதத்தில் போய் முடிந்துவிடும்... வீண் பிடிவாதம் வேண்டாம்... -தினகரன்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

ttv



கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நாளை (07/05/2020) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கரோனா பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், மதுக்கடைகளை திறப்பதில் பழனிசாமி அரசு தீவிரம் காட்டுவது அவர்களின் நிதிச்சுமையை சமாளிக்க அப்பாவி மக்களின் தலையில் நோய்ச்சுமையை ஏற்றிவைக்கும் விபரீதத்தில் போய் முடிந்துவிடும். எனவே வீண் பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தனது திறனில்லாத நிர்வாகத்தால் கரோனா நோய் பரப்பும் இடமாக கோயம்பேடு சந்தையை மாற்றிய பழனிசாமி அரசு, அடுத்ததாக மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளது. இதற்காக உளவியல் ரீதியாக அனைவரையும் தயார்ப்படுத்துவதற்காக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெளிப்படையான எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக மக்களை எளிதாக நடமாட அனுமதித்து வருகிறார்கள்.

அதாவது மதுக்கடை திறந்த பிறகு மக்களை வெளியில் விட்டதாக தெரியக்கூடாது என்பதற்காக இத்தகைய மோசமான நாடகத்தை பழனிசாமி அரசு அரங்கேற்றி வருகிறது. இதன்மூலம் தலைநகர் சென்னைக்கு நிகராக மற்ற ஊர்களிலும் சமமாக கரோனாவை பரப்புவதற்கான ஏற்பாடுகளை அரசே செய்துவருகிறதோ என்ற பயம் மக்களிடம் உருவாகி இருக்கிறது. மேலும் டீக்கடைகளை கூடத் திறக்கக்கூடாது என்பவர்கள் மதுக்கடைகளை திறக்கத் துடிப்பதன் மூலம், 43 நாட்கள் மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தாலும், அரசாங்கத்தால் மதுக்கடைகளை திறக்காமல் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது.

அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்திருப்பதால் தமிழகத்தின் எல்லையோர மாவட்ட மக்கள் அங்கே சென்று மதுவை வாங்குகிறார்கள் என்று பழனிசாமி அரசின் சில அமைச்சர்கள் தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்தி வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு கடும் பாதுகாப்பை மீறி மக்கள் எல்லை தாண்டி போக முடியுமா? அல்லது அவர்களை அரசே எல்லை தாண்ட அனுமதித்து தங்களின் மதுக்கடை திறப்பு முடிவுக்கு ஒரு காரணமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறதா?

சென்னை மாநகர காவல் எல்லையை தவிர்த்து அதன் சுற்றுப்புறங்கள் உட்பட தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க பழனிசாமி அரசு முடிவு செய்திருக்கிறது. அவர்களின் வாதப்படி மாநில எல்லையையே தாண்டிச்சென்று மதுவை வாங்கமுடிந்தவர்களுக்கு, சென்னைக்கு அருகிலுள்ள மாவட்ட எல்லைகளை தாண்டிச்சென்று சென்னைவாசிகள் மதுவை வாங்க முடியாதா? அப்படி வாங்கினால் அதையும் திட்டமிட்டே அனுமதித்து பழனிசாமி அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?

இதன் பின்னணியில், முற்றிப்போன குடிநோயாளியைவிட மோசமான நிலையில் தமிழக அரசு எந்திரம் தடுமாறுகிறதோ? என்ற கேள்வியும் எழுகிறது. நோயை தடுக்கமுடியாமல் ஊரடங்கை செயல்படுத்தியவர்கள், இப்போது ஏழை, எளியவர்களின் பசிக்கு உணவளிக்க முடியாமல் அந்த ஊரடங்கையே சீர்குலைக்கும் விதமாக மதுவை கொடுத்து மக்களை திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், தாய்மார்கள் எனப் பலரும் விடுத்துவரும் உருக்கமான வேண்டுகோள்களை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், 'மக்கள் பாதிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் பிடில் வாசிக்கும் 21 ஆம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக' தமிழக ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மே மாத மத்தியில்தான் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ள நிலையில், இப்போது மதுக்கடைகளை திறந்து இவர்களின் நிதிச்சுமையை மக்களின் தலையில் நோய்ச்சுமையாக இறக்குவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வருமானத்திற்காக டாஸ்மாக் கடைகளை திறக்கும் ஆட்சியாளர்கள், அதற்குப்பதிலாக, இன்னொரு பக்கம் தங்களின் சுயலாபத்திற்காக தேவையற்ற இடங்களில் ஒப்பந்தம் என்ற பெயரில் சத்தமில்லாமல் வாரி இறைத்து வரும் பல நூறு கோடிகளை மிச்சப்படுத்துவதை பற்றி யோசிக்கலாமே! எனவே, மக்களின் உயிரோடு விளையாடாமல் டாஸ்மாக் மதுக்கடைகளை நாளை திறக்கும் முடிவை பழனிசாமி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.