Skip to main content

ஊராட்சி நிதியில் 60 சதவிகிதம் கமிஷன் கேட்டாரா எம்.எல்.ஏ? – பரபரக்கும் ஆம்பூர் 

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

Did Ambur MLA ask for 60 percent commission in panchayat fund?

 

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திலுள்ள மாதனூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், வடபுதுப்பட்டு, மிட்டாளம் உட்பட 9 கிராம பஞ்சாயத்துகளுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தின்கீழ் மாவட்டத்திலுள்ள மற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்றியங்கள் டெண்டர் வைத்து பணிகளை பிரித்து வழங்கியுள்ளது. மாதனூர் ஒன்றியத்தில் மட்டும் இந்த நிதிக்கான டெண்டர் நடக்கவில்லை. அதற்கு காரணம் மாதனூர் ஊராட்சியிலுள்ள 44 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 22 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு இடையே 2.5 கோடி ரூபாய் டெண்டரை பங்கு பிரிப்பதில் தகராறு உருவாகியுள்ளது.

 

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் போன்றவர்களிடம் எங்களுக்கு 60 சதவிகித பணிகள் ஒதுக்க வேண்டும், ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கு 40 சதவிகித பணிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். எங்களுக்கு 70, அவர்களுக்கு 30 சதவிகிதம் என கவுன்சிலர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் 2 முறை டெண்டர் தேதி அறிவிக்கப்பட்டு அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் செப்டம்பர் 29 ஆம் தேதி மாலை மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் கூட்டம் தனித்தனியே எம்.எல்.ஏ தலைமையில் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் சாந்தியின் கணவர் சீனுவாசன் கலந்து கொண்டுள்ளனர்.

 

அங்கு நடந்த பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களிடம், 40 சதவிகிதம் உங்களுக்கு, மீதி 60 சதவிகிதம் எனக்கு எனச்சொல்லியுள்ளார் எம்.எல்.ஏ. அப்போது ஒரு ஊராட்சிமன்ற தலைவர், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 50 சதவிதம் தருகிறார் எனச்சொல்லியுள்ளார். திருப்பத்தூர் எம்.எல்.ஏ, ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ பிரிச்சி தர்றாங்கன்னா அது பின்னாடி வேறு விவகாரம் இருக்கு என எம்.எல்.ஏ சொல்லும் அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

 

எம்.எல்.ஏ கமிஷன் எதுவும் கேட்கவில்லை என மாதனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் நாம் கேட்டபோது, “ஊராட்சி மன்ற தலைவர்கள் – கவுன்சிலர்கள் இடையே நிதி ஒதுக்குவதில் பிரச்சனை. இருதரப்பினரிடம் சேர்மன், அதிகாரிகள் பேசியும் பிரச்சனை தீரவில்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் என்னிடம் பிரச்சனையை தீர்க்கச்சொல்லி கேட்டார்கள், அதிகாரிகளும் வலியுறுத்தினார்கள். அதனாலயே இரண்டு தரப்பிடமும் பேசினேன். கவுன்சிலர்களுக்கு 60 சதவிதம், தலைவர்களுக்கு 40 சதவிகித பணிகள் எடுத்துக்கொள்வது என பேசினேன். இதை நான் கமிஷன் கேட்டதாக திரித்து வெளியிட்டுள்ளார்கள். இப்போது வெளிவந்துள்ள வீடியோவை பாருங்கள், முழு வீடியோவை வாங்கிப் பாருங்கள் நான் எங்காவுது கமிஷன் கேட்டு பேசியிருக்கிறேனா எனப்பாருங்கள். நான் கலைஞர், மு.க.ஸ்டாலின் வழியில் நடப்பவன், என்மீது மக்கள் யாரும் குற்றம்சாட்டவில்லை. என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.