Skip to main content

ஊராட்சி நிதியில் 60 சதவிகிதம் கமிஷன் கேட்டாரா எம்.எல்.ஏ? – பரபரக்கும் ஆம்பூர் 

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

Did Ambur MLA ask for 60 percent commission in panchayat fund?

 

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திலுள்ள மாதனூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், வடபுதுப்பட்டு, மிட்டாளம் உட்பட 9 கிராம பஞ்சாயத்துகளுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தின்கீழ் மாவட்டத்திலுள்ள மற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்றியங்கள் டெண்டர் வைத்து பணிகளை பிரித்து வழங்கியுள்ளது. மாதனூர் ஒன்றியத்தில் மட்டும் இந்த நிதிக்கான டெண்டர் நடக்கவில்லை. அதற்கு காரணம் மாதனூர் ஊராட்சியிலுள்ள 44 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 22 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு இடையே 2.5 கோடி ரூபாய் டெண்டரை பங்கு பிரிப்பதில் தகராறு உருவாகியுள்ளது.

 

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் போன்றவர்களிடம் எங்களுக்கு 60 சதவிகித பணிகள் ஒதுக்க வேண்டும், ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கு 40 சதவிகித பணிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். எங்களுக்கு 70, அவர்களுக்கு 30 சதவிகிதம் என கவுன்சிலர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் 2 முறை டெண்டர் தேதி அறிவிக்கப்பட்டு அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் செப்டம்பர் 29 ஆம் தேதி மாலை மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் கூட்டம் தனித்தனியே எம்.எல்.ஏ தலைமையில் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் சாந்தியின் கணவர் சீனுவாசன் கலந்து கொண்டுள்ளனர்.

 

அங்கு நடந்த பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களிடம், 40 சதவிகிதம் உங்களுக்கு, மீதி 60 சதவிகிதம் எனக்கு எனச்சொல்லியுள்ளார் எம்.எல்.ஏ. அப்போது ஒரு ஊராட்சிமன்ற தலைவர், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 50 சதவிதம் தருகிறார் எனச்சொல்லியுள்ளார். திருப்பத்தூர் எம்.எல்.ஏ, ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ பிரிச்சி தர்றாங்கன்னா அது பின்னாடி வேறு விவகாரம் இருக்கு என எம்.எல்.ஏ சொல்லும் அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

 

எம்.எல்.ஏ கமிஷன் எதுவும் கேட்கவில்லை என மாதனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் நாம் கேட்டபோது, “ஊராட்சி மன்ற தலைவர்கள் – கவுன்சிலர்கள் இடையே நிதி ஒதுக்குவதில் பிரச்சனை. இருதரப்பினரிடம் சேர்மன், அதிகாரிகள் பேசியும் பிரச்சனை தீரவில்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் என்னிடம் பிரச்சனையை தீர்க்கச்சொல்லி கேட்டார்கள், அதிகாரிகளும் வலியுறுத்தினார்கள். அதனாலயே இரண்டு தரப்பிடமும் பேசினேன். கவுன்சிலர்களுக்கு 60 சதவிதம், தலைவர்களுக்கு 40 சதவிகித பணிகள் எடுத்துக்கொள்வது என பேசினேன். இதை நான் கமிஷன் கேட்டதாக திரித்து வெளியிட்டுள்ளார்கள். இப்போது வெளிவந்துள்ள வீடியோவை பாருங்கள், முழு வீடியோவை வாங்கிப் பாருங்கள் நான் எங்காவுது கமிஷன் கேட்டு பேசியிருக்கிறேனா எனப்பாருங்கள். நான் கலைஞர், மு.க.ஸ்டாலின் வழியில் நடப்பவன், என்மீது மக்கள் யாரும் குற்றம்சாட்டவில்லை. என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது