Skip to main content

அதிமுகவின் திடீர் ஈழப்பாசத்துக்கு இதுதான் காரணம்: சுப.வீரபாண்டியன்

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
AIADMK's sudden affection



2009-ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் என குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் ஆளும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 
 

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,
 

பொதுவாக எதிர்க்கட்சிகள்தான் கண்டன ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்துவார்கள். ஆனால் ஆளும் கட்சியாக இருக்கின்ற அதிமுக புரட்சித் தலைவர்களின் வழிவந்தவர்கள் என்பதால், எதிர்க்கட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிற புரட்சியை அரங்கேற்றியிருக்கிறது என்று நான் கருதுகிறேன். அல்லது அவர்களே திமுகதான் ஆளும் கட்சி என்று உள்ளுக்குள் நினைக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.
 

அடுத்ததாக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதின் அடிப்படை ஈழத்தமிழர்களுக்காக. என்ன பெரிய வேடிக்கை, வேதனை என்றால், ''யார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இங்கே அழைத்து வந்து தூக்கில் போட வேண்டும்'' என்று சொன்னாரோ, அவரை தலைவியாக ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் இன்றைக்கு ஈழத்துக்காக பேசுகிறோம் என்பது சற்றும் நம்ப முடியாததாக இருக்கிறது. 
 

அதுமட்டுமல்லாமல் எதையும், எப்போதும் ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்கு ஒரு தகுதியும் வேண்டும், ஒரு நேரமும் வேண்டும். இரண்டுமே அதிமுகவுக்கு இப்போது இல்லை என்பதுதான் உண்மையான நிலவரம். 
 

இன்றைக்கு திடீரென்று ஈழச்சிக்கலை கையில் எடுக்க வேண்டிய தேவை என்ன? ஈழத்திற்கு திமுக ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படியெல்லாம் அந்த மக்களுக்கு உதவியாக இருந்தது என்பது குறித்து நான் தனியாக ஒரு நூலே எழுதியிருக்கிறேன். இப்போதும் அவற்றிலிருந்து பல செய்திகளை நாம் சொல்ல முடியும். 
 

2009ல் ஈழத்தில் நடைப்பெற்ற யுத்தத்தில் தலைவர் கலைஞர் தடுக்கவில்லை என்பதைப்போல யதார்த்தத்துக்கு புறம்பான ஒரு வாதம் இருக்க முடியாது. ஈழப்போர் ஏறத்தாழ ஒரு சர்வதேச சிக்கலாக மாறியதற்கு பிறகு உலகத்தின் வல்லரசுகளான பிரிட்டனும், பிரான்ஸும் முயற்சித்தே அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி பெறாதபோது, இந்தியாவினுடைய ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் நினைத்திருந்தால் அதனை தடுத்திருக்கலாம் என்பது அபத்தம் மட்டும் இல்லை. அது உள்நோக்கம் உடைய ஒரு கூற்றும் ஆகும். 
 

ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு அதனைப் பற்றி ஒரு ஆர்ப்பாட்டத்தை ஆளும் கட்சி நடத்துகிறது என்பது ஒரு விதமான கேலிக்கூத்துதான். அந்த ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு ஈழச் சிக்கலைப் பற்றி எந்த அளவுக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. 
 

ஈழத்தைப் பற்றி அவர்களை பேச சொன்னால் யார் யார் எந்தளவுக்கு வரலாற்று உண்மைகளை சொல்லுவார்கள் என்பதும் தெரியவில்லை. ஏதோ ஒன்றைப் பற்றி பேச வேண்டும். இன்றைக்கு இருக்கிற பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடாது. 9 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரச்சனையைப் பற்றி இப்போது பேச வேண்டும் என்றால், இப்போது இருக்கிற பிரச்சனையைப் பற்றி பேசாதீர்கள், குட்காவைப் பற்றி பேசாதீர்கள், அடிமைத்தனமாக ஆட்சி இருப்பதைப் பற்றி பேசாதீர்கள், நீட் தேர்வைப் பற்றி பேசாதீர்கள், 2009ல் நடந்த ஈழப்போர் பற்றி பேசலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இதுதான் அவர்களின் ஈழப்பாசத்திற்கு காரணம்.
 

அவர்களை மக்கள் நம்பமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்காரர்களே நம்ம மாட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டம் ஒட்டுமொத்த மக்களால் கவனிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுகுறித்து பேசி மக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டியதில்லை என்றும் தோன்றுகிறது. 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.