Skip to main content

நிவாரணம் கொடுக்க வீடு வீடாக ஏறி, இறங்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. 

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
dmk

                                தி.மு.க. மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி


கரோனா வைரஸ் ஊரடங்கு முடக்கத்தால் நாடு முழுக்க ஒட்டு மொத்த மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு துன்ப துயரங்கள் ஈரோட்டிலும் இருந்தது. ஈரோடு விசைத்தறி, ஜவுளி மற்றும் மஞ்சள் உற்பத்தி என்ற விவசாய பொருளின் தலைநகராக உள்ளது. இவ்விரு தொழில்களை நம்பியே வாழும் ஏழை கூலி தொழிலாளர்கள் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் ரொக்கம், ரேசன் பொருட்கள் சில நாட்கள் மட்டுமே இவர்களின் வீட்டில் பயன் பெற்றது. ஆனால் யானை பசிக்கு சோளப் பொறி போலத்தான் இருந்தது அரசு நிவாரணம். 
 

இந்நிலையில் சில தன்னார்வலர்கள் உதவியும் மக்களுக்கு சென்றது. இதற்கடுத்து முக்கிய பங்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.வைசாரும். மா.செ.வும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி ஈரோட்டில் உள்ள ஒவ்வொரு வீதியாக அவரே சென்று வீடு வீடாக அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் என மொத்தம் ஒரு லட்சம் குடும்பத்திற்கு முத்துச்சாமி தலைமையிலான தி.மு.க.வினர் மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

அரசு கொடுத்த உதவி பொருட்கள் மட்டுமே மக்களுக்கு வழங்கி வந்த ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு, மக்கள் வாழ்நிலையை உணர்ந்து களத்தில் இறங்கியுள்ளார். தனது சொந்த பணம் ஒரு கோடி ரூபாய் செலவிட்டு ஈரோட்டில் உள்ள 70 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் அரிசி, பருப்பு, மளிகை பொருள் என 14 ந் தேதி காலை முதல் வழங்க தொடங்கியுள்ளார்.


 

 

admk

ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு, அமைச்சர் செங்கோட்டையன்


வியாழன் காலை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையனை வரவழைத்து தொடங்கி வைத்தார். "இரண்டு முறை எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்கள் ஈரோடு மக்கள். அவர்களுக்கு செய்ய வேண்டியது எனது கடமை. இப்போதைக்கு அரிசி மளிகை பொருட்கள் எனது சொந்த தொகையில் நானே வீடு வீட்டுக்கு நேரில் சென்று கொடுக்கிறேன். அதேபோல் வீடு தேடி வரும் எல்லோருக்கும் நிவாரண உதவியும் வழங்குகிறேன். 70 ஆயிரம் ரேசன் கார்டு மேலும் 30 ஆயிரம் என மொத்தம் 1 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். அடுத்தடுத்த 15 நாட்களுக்கொரு முறை மீண்டும்  மக்களுக்கு இரண்டாவது கட்டமாக நிவாரண உதவி வழங்கவும் முடிவு செய்துள்ளேன்" என்றார்.


எம்.எல்.ஏ. தென்னரசு களத்தில் இறங்கியது போல் மற்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அவர்களது சொந்த பணத்தை செலவழித்து அவர்கள் தொகுதி சார்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் கொடுத்தால் நல்லது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.