Skip to main content

''எங்களுடன் கூட்டணி வைக்காததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது''-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

 AIADMK loses power because it did not form an alliance with us - Premalatha Vijayakand interview!

 

எங்களுடன் கூட்டணி வைக்காததுதான் அதிமுக செய்த மிகப்பெரிய தவறு  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இன்றைக்கும் விஜயகாந்தை தெய்வமாக, தலைவராக நினைக்கும் கோடிக்கணக்கான தொண்டர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் யாரோ ஒருவர் கட்சியைவிட்டு போவதால் கட்சிக்கு ஒன்றும் இழப்பு கிடையாது. ஒருவர் போனால் அந்த இடத்திற்கு பத்து பேர் வந்துகொண்டு இருக்கிறார்கள். அதனால் எங்களுடைய ஆலோசனையே கட்சியை அடுத்த லெவலுக்கு கொண்டு போவதைப் பற்றித்தான். பெரிய அளவில் கூட்டம் கூடக்கூடாது என தடுத்ததால்தான் காலதாமதமாக இந்த கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இனிய ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும் என்பதையும் சொல்லி இருக்கிறோம். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தான் எங்கள் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெறும். அந்த வகையில் இந்த வருஷம் இன்னும் ஒரு மாத காலத்தில் நடத்தி தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப இருக்கிறோம்.

 

விஜயகாந்த் நல்லா இருக்காரு நேற்று கூட ஜெனரல் செக்கப்பிற்காக அழைத்துச் சென்றோம். இப்போ சிறந்த முறையில் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். எல்லா நிர்வாகிகளும் ஆலோசனையில் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதை விஜயகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறோம். இங்கு எல்லா பதவிகளையும் தீர்மானிப்பது விஜயகாந்த் தான்.  யாருக்கு எந்தப் பதவி, எப்போது கொடுக்கவேண்டும் என அவருக்குத் தெரியும். அவர் அறிவிப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும். எங்களுடன் கூட்டணி வைக்காததுதான் அதிமுக செய்த மிகப்பெரிய தவறு. இன்று அவர்கள் ஆட்சி இழந்திருக்கிறார்கள். ஏன் என்றால் ஆறு மாதத்திற்கு முன்னாடியே தேமுதிகவிலிருந்து பேசினோம். இப்போது இருந்தே கூட்டணி, யாருக்கு எந்த தொகுதி என்று பேசலாம் என சொன்னோம். ஆனால் அவர்கள் மிஸ் பண்ணிவிட்டார்கள். அதன் விளைவு ஆட்சியை இழந்திருக்கிறார்கள். இதுதான் உண்மை. இப்போது அதை அவர்கள் உணர்கிறார்கள்.

தேமுதிகவை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு முன்பே எல்லாருமே எங்களிடம் பேசும்போது அதற்கான ஆலோசனையைக் கொடுத்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நாங்கள் பேசுவோம்...பேசுவோம்... என காலம் தாழ்த்தி கடைசியில் முடிவெடுக்க முடியாமல் ஏற்பட்ட பிரச்சனைதான் இப்போது ஆட்சியை இழந்திருக்கிறார்கள். சரியான நேரத்தில் நாங்கள் சொன்ன முடிவை எடுத்திருந்தால் இன்று ஆட்சி அதிமுக கைப்பற்றியிருக்கும். தேமுதிகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். இழந்தது அவர்கள்தான்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.