Skip to main content

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்; இபிஎஸ் செய்தவற்றைக் கூறி ஓபிஎஸ் தரப்பு வாதம்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

AIADMK General Secretary Issue; OPS's argument is that what EPS did

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேர் சார்பிலும் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது. 

 

இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இதை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார். விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு “தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். அன்று தெலுங்கு வருடப் பிறப்பின் காரணமாக நீதிமன்றத்திற்கு விடுமுறை தான் என்றாலும், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி வாங்கி அன்று முழுவதும் வழக்கை விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது. அதில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளையும் வகித்துள்ளார். கட்சிக்கு மிக நெருக்கடி நேர்ந்த சமயங்களில் கட்சிக்காகப் பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது எனவும், எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த விளக்கமும் கேட்காமல் காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது, நியாயமற்றது என வாதிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.  

 

விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். பெரும்பான்மை உள்ளது என்ற முடிவின் காரணமாக இம்மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளனர். இது எம்ஜிஆரின் நோக்கத்திற்கே விரோதமானது. இம்மாதிரியான முடிவுகள் கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கே விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மற்றபடி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை” என்பன போன்ற வாதங்கள் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வைக்கப்பட்டு வாதிடப்பட்டது.

 

மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. இந்த குறிப்பிட்ட விதிகளில் விலக்கு பெற்றே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன. தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாக ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்கமுடியும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிடவில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வாதிடப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்