அ.தி.மு.க முன்னாள் எம்.பி முறைப்படி தி.மு.க.வில் இணைந்த விழா!

DDD

விழுப்புரம் முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் ராஜ்யசபா எக்ஸ் எம்.பி.யுமான டாக்டர் லட்சுமணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து முக்கிய நிர்வாகிகளுடன் தி.மு.க.வில் இணைந்தார். அதன் பிறகு முறைப்படி மாவட்டச் செயலாளர் பொன்முடி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணையும் விழா இன்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் லட்சுமணன் தனது ஆதரவாளர்கள் சுமார் 2,000 பேர்களுடன் கலைஞர் அறிவாலயம் வந்தார். அவருக்கு மாவட்டச் செயலாளர் பொன்முடி சால்வை அணிவித்து வரவேற்றார். தனது ஆதரவாளர்களுடன் முறைப்படி தி.மு.கவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய டாக்டர் லட்சுமணன், தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து ஸ்டாலினை தமிழக முதல்வராக அமர வைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் சபதம் ஏற்போம் என்று சூடாகப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் புகழேந்தி, மாவட்ட பொருளாளர் எக்ஸ் எம்.எல்.ஏபுஷ்பராஜ், முன்னாள் தி.மு.க நகர மன்ற தலைவர் ஜனகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்த டாக்டர் லட்சுமணன் ஆதரவாளர்கள் தி.மு.க.வின் வலிமையை அதிகரிக்கச் செய்வார்கள் என்று மாவட்டச் செயலாளர் பொன்முடி உட்பட தி.மு.க.வினர் நம்பிக்கையுடன் உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு எல்லாம் வெட்ட வெளிச்சமாகும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். கரோனா பரபரப்பாக பரவி வரும் இந்தச் சூழ்நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடி கட்சியில் இணைப்புவிழா நடத்தியுள்ளது விழுப்புரம் நகர மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

admk join Ponmudi villupuram
இதையும் படியுங்கள்
Subscribe