ADVERTISEMENT

'அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எங்களுக்கில்லை': அதிருப்தியில் அதிமுக - தேமுதிக கூட்டணி?

12:56 PM Mar 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுடனும், விஜயகாந்தின் தேமுதிகவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிக, அதிமுகவிற்கு இரண்டு ஆப்ஷன்களைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆப்ஷன் 1: பாமாவிற்கு ஒதுக்கப்பட்டது போல் 23 தொகுதிகள் வேண்டும். ஆப்ஷன் 2: இருபது தொகுதிகளுடன் ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிமுக சார்பில் 12 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக, தற்போது வரை பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று அமைச்சர்கள் நேரில் சந்தித்த நேரத்தில், பிரேமலதா விஜயகாந்த் விழுப்புரத்தில் கட்சி நிகழ்ச்சியில் இருந்ததால், அவருக்குத் தொலைபேசியில் 12 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசிக்கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்தே தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நடந்த பேச்சுவார்த்தை குறித்து பிரேமலதாவிற்கு தேமுதிக நிர்வாகிகள் தொலைபேசியில் தகவல் தெரிவித்திருந்த நிலையில், ‘பாமகவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு கொடுக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க நமக்கு கிளைக் கழகம், பூத் கமிட்டி உள்ளது’ என பிரேமலதா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலையில், உங்களுக்கு வாக்குவங்கி அதிகம் கிடைக்காது. எனவே 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது’ என அதிமுக தரப்பு கூறியதாகவும், இதனால் அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (01.03.2021) காலை அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தையை தேமுதிகவினர் தவிர்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்பொழுது சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணிக்கு அழைக்காவிடில் தனியாத் தேர்தலைச் சந்திக்கும் பலமும், போட்டியிடுவதற்கான வேட்பாளர்களும் தேமுதிகவில் உள்ளனர் என முன்னரே பல செய்தியாளர் சந்திப்புகளில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT