Skip to main content

“பாராளுமன்றத்தில் மக்களின் குரலாய் ஒலிப்பேன்” - அதிமுக வேட்பாளர் கருப்பையா பரப்புரை

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
AIADMK candidate Karupiya campaign in trichy

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா வீதி, வீதியாக சென்று பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார். பிரச்சார நிகழ்வுக்கு திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், உள்ள பனையக்குறிச்சியில் தொடங்கிய பிரச்சாரம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம், கூத்தைப்பார் பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி, திருவெறும்பூர், காட்டூர், அரியமங்கலம், ஆகிய பகுதிகளில் இரவு வரை நடைபெற்றது.

நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், “திருச்சி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிபெறுவார் என்ற பேச்சு அதிகரித்துள்ளது. அதை நாம் உறுதி செய்ய வேண்டும். எனவே அனைவரும் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்” என்று பேசினார்.

அதனை தொடர்ந்து, திருச்சி தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் பேசியதாவது, “புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல, நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, எனக்கு ஆதரவு கொடுத்து எப்படி என்னை வெற்றி பெற செய்தீர்களோ அதேபோல, புதுக்கோட்டை தொகுதியில் இருந்து வந்து திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தம்பி ப. கருப்பையாவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். 

இதையடுத்து, அ.தி.மு.க வேட்பாளர் ப. கருப்பையா பேசுகையில், “உங்கள் சகோதரனாக உங்களிடம் வாக்கு கேட்கிறேன். எனக்கு வாக்களித்து செங்கோட்டைக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுப்பேன். மக்களின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிப்பேன். திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு (சர்வீஸ்) சாலை பணியை முதல் பணியாக செய்து முடிப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து, மாவட்ட செயலாளர் குமார் என்னை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன்” என பேசி வாக்குகள் சேகரித்தார்.

இந்த நிகழ்வில்,அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி,  அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், மாணவரணி மாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம் ஷா, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், கூத்தைப்பார் செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், திருவெறும்பூர் பகுதி அவைத் தலைவர் முருகானந்தம், செயலாளர் பாஸ்கர் (எ)கோபால்ராஜ், வட்டச் செயலாளர்கள் ரோஷன், அபிமன்யு மற்றும் வேங்கூர் சாம்பு, தங்கமணி, ஆர்ட்டிஸ்ட் தேவா, நவல்பட்டு பாலமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்