Skip to main content

அதிமுக பெண் கவுன்சிலர்கள் கடத்தல்? - 'தண்ணீ ' காட்டிய திமுக

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

AIADMK abducts female councilors?

 

பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு பெண் கவுன்சிலர்கள் இருவர் கடத்தப்பட்டதாக அதிமுக பிரமுகர் புகார் கொடுக்க, யாரும் கடத்தவில்லை எனப் பெண் கவுன்சிலர்கள் வாக்குமூலம் அளிக்க, சேலம் அரசியல் களத்தில் பரபரப்பும் சர்ச்சையும் ஒருசேர ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் இருந்து வந்தார். மொத்தம் 13 கவுன்சிலர்கள் கொண்ட இந்த ஒன்றியத்தில் திமுக தரப்பில் 5, அதிமுக தரப்பில் 6, பாமக 1, இ.கம்யூ., 1 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், தலைவர் பதவியைக் கைப்பற்றத் திட்டமிட்ட திமுக, தங்கள் தரப்புக்கு ஆதரவாக கவுன்சிலர்களை இழுக்கும் வேலைகளைச் செய்தது. அதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.

 

fafaf
          சுரேஷ்குமார்

பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் திமுக பொறுப்பாளரான பாரப்பட்டி சுரேஷ்குமாரை எப்படியும், அந்த ஒன்றியக்குழுவின் தலைவராக ஆக்கிவிட வேண்டும் என்ற மும்முரத்தில் கட்சியினர் ஜெகநாதனுக்கு எதிராக ஆதரவு திரட்டும் வேலைகளைக் கடந்த மூன்று மாதங்களாகச் செய்து வந்தனர். ஜெகநாதனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்த வேளையில், அதை எதிர்த்து ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜன. 21) நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன. பந்து தனது கையைவிட்டு நழுவிச் சென்றதை உணர்ந்து கொண்ட ஜெகநாதன், தனது கட்சியைச் சேர்ந்த பூங்கொடி, சங்கீதா ஆகியோரை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்குச் சென்று கொண்டிருந்தார். 

 

ஏனெனில், திமுகவின் பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு ஆதரவாக இவர்கள்தான் செயல்பட்டனர் என்பதை அறிந்திருந்தார் ஜெகநாதன். பழம் நழுவி பாலில் விழும் நேரத்தில் கவுன்சிலர்கள் மாயமானதை அறிந்த பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பு, குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை மடக்கினர். 20க்கும் மேற்பட்ட கும்பல் ஜெகநாதன் காரை மறித்து, பெண் கவுன்சிலர்கள் இருவரையும் தங்களது காரில் ஏற்றிச்சென்றனர். தனக்கு எதிரான வாக்கெடுப்பு கூட்டத்தை முறியடித்துவிடும் நோக்கத்தில் மனக்கணக்குப் போட்டு வைத்திருந்த ஜெகநாதன், இந்தச் சம்பவத்தால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக குமாரபாளையம் காவல்நிலையத்தில் தன் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச்சென்று விட்டதாகப் புகார் அளித்தார்.  

 

AIADMK abducts female councilors?
         ஜெகநாதன்

 

இதுகுறித்து ஜெகநாதன் கூறுகையில், ''நான் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் அதிமுக செயலாளராகவும், ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறேன். என் மீது ஜன. 21ம் தேதியன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வாக்கெடுப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக, எங்கள் கட்சியைச் சேர்ந்த  (அதிமுக) கவுன்சிலர்கள் 5 பேரை அழைத்துக் கொண்டு பவானி கூடுதுறையில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்துவிடலாம் எனக்கருதி, கார்களில் சென்று கொண்டிருந்தோம். ஒரு காரில் நானும், பெண் கவுன்சிலர்கள் சங்கீதா, பூங்கொடி உள்ளிட்ட நான்கு பேரும் இருந்தோம். மற்றொரு காரில் இன்னும் இரண்டு கவுன்சிலர்கள் இருந்தனர். குமாரபாளையம் அருகே கத்தேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் கார்களில் வந்து எங்களை வழிமறித்தனர்.  

 

அந்தக் கும்பல் கையில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை தலை முடியைப் பிடித்து இழுத்துச்சென்று அவர்கள் காரில் கடத்திச்சென்று விட்டனர். என்னை கீழே இறங்க விடாமல் கார் கதவை மூடிவிட்டனர். பிளேடு வைத்துக்கொண்டு மிரட்டினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார் ஜெகநாதன்.

 

asfaf
          ஜெயசங்கரன்

 

இது ஒருபுறம் இருக்க, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜமுத்து, ஜெயசங்கரன், சுந்தரராஜன், நல்லதம்பி, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு அதிமுக செயலாளர் ஜெகநாதன், சேலம் ஒன்றிய செயலாளர் வையாபுரி மற்றும் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதிமுக எம்எல்ஏ ஜெயசங்கரன் ஊடகங்களிடம் கூறுகையில், “கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. கடத்தல் கும்பல் தாக்கியதில் பெண் கவுன்சிலர்களுக்கு கழுத்திலும், கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்களுக்கே இந்தக் கதி என்றால், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

 

திமுகவிற்கு தேர்தலில் ஜெயிக்க திராணி இல்லை. கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் அரசுப் பணியில் உள்ளனர். அதை வைத்து திமுகவினர் மிரட்டி, கடத்திச்சென்று விட்டனர். இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறோம். எங்கள் கவுன்சிலர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.  

 

safdasfd
               பூங்கொடி, சங்கீதா

 

இந்தப் பரபரப்புக்கு இடையே, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. அதில், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அதிமுக பெண் கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் நிவேதா உள்பட 10 பேர் ஜெகநாதனுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை ஜெகநாதன் இழந்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோர் கூறுகையில், “எங்களை யாரும் கடத்திச்செல்லவில்லை. நாங்களாக சுய விருப்பத்தின்பேரில்தான் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தோம்” என்று மட்டும் சுருக்கமாகக் கூறினர். அரசியல் சதுரங்கத்தில் அதிமுக ஒரு கணக்குப்போட, அதை திமுகவினர் முறியடித்து வெற்றி பெற்றுள்ளனர். இச்சம்பவம், சேலம் மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்