Skip to main content

வேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
k balakrishnan cpim

 

பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் உள்பட வேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக திகழ்வது வேளாண்மையே. இன்றைக்கும் 50 சதமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, 100 சதவீதம் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதும் வேளாண்மையே. இயற்கையோடு இணைந்து, சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் விவசாயத்தை அழித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்காகவே பல திட்டங்கள் தமிழகத்தில் தீட்டப்படுகின்றன. 

குறிப்பாக, எட்டு வழிச்சாலை, கெயில் எரிவாயு, பெட்ரோலிய குழாய் பதிப்பு, உயர்மின் கோபுரங்கள் அமைத்தல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காகவே திட்டமிடப்படுகின்றன. இவைகளை எதிர்த்து பலகட்ட போராட்டங்கள் நடத்தியன் விளைவாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டன. கெயில் திட்டத்தையும் தமிழக அரசு தடை செய்தது.

இருப்பினும், பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை துவங்கி, கர்நாடக மாநிலம் வரை பெட்ரோலிய பொருட்களை எடுத்து செல்வதற்காக ஐ.டி.பி.எல். குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களும், கிராமப்புற வீடுகளும் பாதிக்கும் ஆபத்துள்ளது. 

இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என ஏற்கனவே ஆயிரக்கணக்கான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி கரோனா தொற்று பரவி இருக்கும் இச்சூழ்நிலையில் ஐ.டி.பி.எல். நிறுவனத்தில் சார்பில் கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக் காலத்தை பயன்படுத்தி எப்படியாவது இத்திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்ற நோக்கோடு இக்கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று மேற்கு மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு, பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் உள்பட வேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டுமெனவும், ஐ.டி.பி.எல். நிறுவனம் அறிவித்துள்ள கருத்துக் கேட்பு கூட்டத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்கு தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராட முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்'' இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.