Skip to main content

என்னிடம் இந்த பூச்சாண்டி எல்லாம் காட்டவேண்டாம்..! - நாராயணசாமி ஆவேசம்! 

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

Struggle

 

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்பப் பெறக்கோரியும் புதுச்சேரியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன், காங்கிரஸ் துணைத்தலைவர் தேவதாஸ்,  தி.மு.க (வடக்கு) மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் முருகன், விடுதலைச் சிறுத்தைகள் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கி முதல்வர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார். 

 

அவர் பேசும்போது:- "விவசாயத்தை வர்த்தகம் ஆக்குவது, உரிய விலை கொடுப்பது, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு திருத்தியிருக்கிறது. பா.ஜ.க அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை பலம் உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லை. அங்கு இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்தபோது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். 

 

அதனைப் பொருட்படுத்தாமல் துணை சபாநாயகர் சட்டத்தை நிறைவேற்றினார். தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்து சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என மனு அளித்தனர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள். அதையும் மீறி அவசர அவசரமாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜனநாயகப் படுகொலை செய்து மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். விவசாயிகளின் விரோத மசோதாவைக் கண்டித்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 

 

சிறு விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்வதுடன் விவசாயிகளை அடிமையாக்கி, கூலிகளாக்கிவிடுவார்கள். விளைபொருட்களை எந்த மாநிலத்துக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யலாம் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களால் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

 

நாட்டை கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்கும் வகையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி விட்டனர். தொழிலாளர் சட்டங்களில் கை வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என கவர்னர் எனக்குக் கடிதம் எழுதினார். முதலில் நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டர். அதன் பிறகுதான் முதலமைச்சர். என்னிடம் இந்த பூச்சாண்டி எல்லாம் காட்டவேண்டாம். 

 

பஞ்சாப் முதல்வர் இந்த மத்திய அரசின் மசோதாவை எதிர்த்து தெருவில் இறங்கி போராடி இருக்கிறார். இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கவலைப்பட மாட்டோம். எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கின்றோம். இது ஆரம்பம்தான். கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் சக்தியைத் திரட்டுவோம். விவசாயிகளுக்காக ஆட்சி இழந்தாலும் பரவாயில்லை. எனவே விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்ட மசோதாக்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்" என்றார்.  

 

Ad

 

புதுச்சேரியில் 7 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

 

இந்த ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, புதிய நீதிக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், படைப்பாளி மக்கள் கட்சி, தேசிய வாத காங்கிரஸ், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.