Skip to main content

அ.தி.மு.க முகநூலென்ன ‘ரகசிய’ பக்கமா? - ஐ.டி.விங் நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

ADMK virudhunagar FaceBook issue

 

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில்,  மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளும், ஊராட்சி மற்றும் நகர வார்டுகளில் பொறுப்பாளர்களும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
 


விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பட்டியல், அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பிரிவில்,  800 பேர் வரை புதிய நிர்வாகிகள் ஆகியுள்ளனர். 


இந்த நியமனம், இம்மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜிக்கு  எதிராக,  கோஷ்டி அரசியல் செய்து வருபவர்களை உஷ்ணப்படுத்திய நிலையில், ’2016-ல் மாவட்டம்தோறும், 14 ஐ.டி விங்க் நிர்வாகிகளை ஜெயலலிதா நியமித்தார். அப்போது, ஐ.டி விங்க் தூள் கிளப்பியது. 2020-ல், இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 800 பேரை நியமித்துள்ளனர். ஒரு சிலரைத் தவிர, மற்ற அத்தனை பேருமே வேஸ்ட்!’ என்று சமூக வலைத்தளங்களில், அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

 

ADMK virudhunagar FaceBook issue


‘அத்தனை பேரும் வேஸ்ட்டா?’ என்று தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “பாதிக்கும் மேல அப்படித்தான்! வார்டு கவுன்சிலர்ல இருந்து, கிளைச் செயலாளர் வரைக்கும், மாமன், மச்சான், சொந்தக்காரன்னு, ஆளாளுக்கு சிபாரிசு பண்ணுன எல்லாருமே நிர்வாகிகளா ஆகிட்டாங்க. இவங்க எல்லாருமே ராஜேந்திரபாலாஜியோட வலுவான ஆதரவாளர்கள். இந்த மாதிரி சிபாரிசு பண்ணுனவங்க லிஸ்ட்ல, கட்சியோட ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஐயாவும் வர்றாரு. 


சாம்பிளுக்கு ஒருத்தரை சொல்லுறேன். பேரு ராஜ்கமல். அவரு இருக்கிறது சென்னைல. ஆனா.. சொந்த ஊரு அருப்புக்கோட்டைன்னு சொல்லி,  தகவல் தொழில்நுட்பப் பிரிவுல, விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஆயிட்டாரு. இவரோட ஃபேஸ்புக்ல போயி பார்த்தேன். அப்படி ஒண்ணும் ஆக்டிவா இல்ல.” என்றவர், “முகநூலில், குறிப்பாக பெண்களும், தங்களின் சுயவிபரங்களை வேறு யாரும் தெரிந்துகொள்ளக் கூடாது என்று நினைப்பவர்களும்தான், ப்ரொஃபைலை ‘லாக்’ பண்ணி வைப்பார்கள். இங்கே கொடுமை என்னவென்றால், விருதுநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க பக்கத்தையே, லாக் செய்து வைத்திருக்கின்றனர். அது என்ன ரகசியப் பக்கமா?  இப்படி இருந்தால் எப்படி?” என்று கேட்டார்.  

 

ADMK virudhunagar FaceBook issue


விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ராஜ்கமலை தொடர்பு கொண்டோம்.  “அம்மா இந்த இயக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு வழி நடத்தினாங்க. அவருக்குப் பிறகு, ஆட்சியையும் கட்சியையும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பா நடத்திக்கிட்டிருக்காங்க. கட்சி மீது நான் வைத்திருக்கும் பற்றினையும் செயல்பாட்டையும் பார்த்துத்தான், எனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்திருக்காங்க.

 

ADMK virudhunagar FaceBook issue
                                                               ராஜ் கமல்

 

கே.கே.எஸ்.எஸ்.ஆரை எதிர்த்து அரசியல் பண்ணுற குடும்பத்தைச் சேர்ந்தவன் நான்.  ஆரம்பத்துல இருந்தே கட்சியின் அடிப்படை உறுப்பினரா இருந்துட்டு வர்றேன். கடந்த எம்.எல்.ஏ எலக்ஷன்ல, அருப்புக்கோட்டைல நடந்த பிரச்சாரக் கூட்டங்கள்ல கட்சிப் பணியாற்றி இருக்கேன். நான் மட்டுமில்ல, விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரிந்துரைத்த எல்லாருமே தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தகுதியானவங்கதான். அத்தனைபேரும் வேஸ்ட்டுங்கிறது எம்.எல்.ஏ அணி திட்டமிட்டுப் பரப்புற வதந்தி. 

 

ADMK virudhunagar FaceBook issue

 

எங்களுக்கு எதிரான இந்த எதிர்மறையான பதிவும்கூட, எங்களுக்கு உத்வேகத்தையே கொடுத்திருக்கு. எந்த நோக்கத்தோடு புரட்சித் தலைவர் இந்தக் கட்சியை ஆரம்பிச்சாரோ, அதிலிருந்து விலகாம, ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், டிவிட்டர்ன்னு சமூக வலைத்தளங்களில், எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரத்திற்கு நிமிடத்திற்கு நிமிடம் தக்க பதிலடி கொடுப்போம்.” என்று மிகவும் சீரியஸாகப் பேசினார்.

 

அ.தி.மு.க ஐ.டி.விங் புதிய நிர்வாகிகளின் செயல்பாடு போகப்போக தெரிந்துவிடத்தானே போகிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.