Skip to main content

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆன்மா திமுக அரசை சும்மா விடாது..” - தங்கமணி 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

ADMK Thangamani condemn on DMK government

 


அதிமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி பேசியதாவது; “திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களான நிலையில், தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்றவில்லை. குறிப்பாக மக்களுக்கு நன்மை செய்யாமல் சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஏழை, எளிய சாமானிய மக்களின் ஆட்சியாக இருந்துவந்தது.

 


கடந்த 10 ஆண்டுகளில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்கு பிறகு மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரசாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. ஆனால் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மின் தட்டுப்பாடு உள்ள மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.  ஸ்டாலின் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதிதாக மக்கள் மீது சுமையை திணிக்கும் அரசாக உள்ளது. எனவே வருகின்ற பாராளுமன்றம், மற்றும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த ஆட்சி நடக்க கூடாது என்று மக்கள் விரும்புவதைப் போல திமுகவினரும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க கூடாது என்று விரும்புகிறார்கள். 

 

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டுமென்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால், பன்னீர்செல்வம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். தலைமை கழகத்தில் புகுந்து ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடத்தை அடித்து உடைத்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆன்மா அடித்து நொறுக்கியவர்களை சும்மா விடாது. இதற்கு துணை போன திமுக அரசையும் சும்மா விடாது. வருகின்ற பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முதலமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்” இவ்வாறு தங்கமணி பேசினார்.

 

ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான ரத்தினவேல் பேசியதாவது; “மக்களைப் பாதிக்கும் வகையில் திமுக அரசு மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசு பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் திட்டம், நீட் தேர்வு ரத்து எனத் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் செயல்படுத்தவில்லை. எடப்பாடியார் தலைமையில் 4 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற வளர்ச்சி செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசுக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.