Skip to main content

2016இல் வாஷ் அவுட்; 2021இல் இரு இடங்கள்..! கன்னியாகுமரியில் அதிமுக

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

ADMK Thalavaai Sundaram won in kanyakumar constituency

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. 

 

சென்னை, திருவள்ளூர், திருச்சி, இராமநாதபுரம், கரூர், பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளையும் திமுக முழுவதுமாக கைப்பற்றியது. அதேபோல், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளையும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் கைப்பற்றியது. ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியும், இரண்டு தொகுதிகளை அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சியும் பெற்றுள்ளது. 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு தொகுதிகள் உள்ளன. இதில், பத்மநாபபுரம் தொகுதியை திமுகவும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய மூன்று தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வென்றுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியை அதிமுகவும், நாகர்கோவில் தொகுதியை பாஜகவும் கைப்பற்றியுள்ளது. 

 

இதில், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் தளவாய் சுந்தரமும், திமுக சார்பில் ஆஸ்டினும் போட்டியிட்டனர். இதில், அதிமுக தளவாய் சுந்தரம் 1,09,745 வாக்குகளைப் பெற்றார். திமுக ஆஸ்டின் 93,532 வாக்குகளைப் பெற்றார். இறுதியில் தளவாய் சுந்தரம், 16,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2016 தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாத நிலையில், தற்போது அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும், அதில் அதிமுக வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.