Skip to main content

அதிமுகவை பின்னுக்கு தள்ளும் பாஜக! - பொன்னையன் வேதனை! 

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

ADMK senior leader Ponnaiyan about bjp
கோப்புப் படம் 

 

தமிழ்நாட்டில் 2021ஆம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து அதிமுக தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக 4 இடங்களை வென்றது. 

 

அதிமுக அரசியலில் அதன் பொதுச்செயலாளரான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சி பெரும் சரிவுகளைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக அதன் தலைமை குறித்து அவ்வப்பொழுது பெரும் விவாதங்களும் எழுந்து வருகின்றன. அரசியல் விமர்சகர்களும், அதிமுகவை பாஜக தான் நிர்வாகம் செய்கிறது என்றும் பேசிவருகின்றனர். அதற்கேற்றார் போல், பாஜக தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலையும், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டுவருகிறது என்றும் தெரிவித்திருந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில், சென்னை அதிமுக அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அதிமுக மூத்தத் தலைவர் பொன்னையன், அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளப்படுவதை குறித்து வேதனை தெரிவித்திருக்கிறார். அந்தக் காணொளி தற்போது பரவிவருகிறது. அந்தக் காணொளியில் அவர், “அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் எனும் மறைமுக பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. இதில் நாம் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய தேவை இருப்பதால் நான் சொல்கிறேன். முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு என எதற்கும், தமிழ்நாட்டில் பாஜக குரல் எழுப்பவதே இல்லை. இது மக்களுக்கு புரிய வேண்டும். இதை தோழமைக் கட்சி எனும் முறையில் நாம் சொல்ல வேண்டாம். சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்கிறார். அவர் அருகிலேயே முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களும் அமர்ந்திருப்பது அந்தக் காணொளியில் தெரிகிறது. 

 

அதிமுகவின் மூத்தத் தலைவர் ஒருவர் கட்சிக் கூட்டத்தில் இப்படி வேதனையுடன் பேசியது அக்கட்சியினரிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.