அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒருஇடம் ஒதுக்கப்பட, இரண்டு சீட்கள் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியில் சீனியர்கள் கட்சிக்கு தலைமைக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத இரண்டு வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்தது.
இந்த இரண்டு வேட்பாளர்களை அறிவித்த காரணத்திற்கான பின்னணி என்னவென்று விசாரித்த போது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதில் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணித்தினால் சிறுபான்மையினரின் கோபத்துக்கு அதிமுக ஆளானது. அதனால் முஸ்லீம் வாக்கு வங்கியை அதிமுக இழக்க நேரிட்டது என்று உளவுத்துறை ரிப்போர்ட் அதிமுகவின் தலைமைக்கு அளித்தது. இதனால் கண்டிப்பாக ராஜ்யசபா இரண்டு சீட்டில் ஒரு சீட் சிறுபான்மையினருக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவெடுத்ததாக கூறுகின்றனர்.
அடுத்து அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குகளால் அதிமுக படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. இதனால் கொங்குமண்டலத்தில் மறுபடியும் தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு நபருக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உறுதியாக இருந்தனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே முஸ்லீம் மதத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் முகமது ஜானுக்கும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த சந்திரகேகரனுக்கும் சீட் ஒதுக்கப்பட்டது என்று தெரிவிக்கின்றனர். இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் அதிருப்தியானாலும் பரவாயில்லை என்று அதிமுக தலைமை நினைத்ததாக சொல்கின்றனர். வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்பு அதிமுக தலைமையின் தோல்வி குறித்து உளவுத்துறை அளித்த ரிபோர்ட்டின் அடிப்படையிலேயே அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளனர் என்கின்றனர்.