
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மற்றொருபுறம் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளுக்கான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (N.D.A- என்.டி.ஏ.) மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாஜக - அதிமுகவின் கூட்டணி ஆட்சி அமைக்கும்” எனப் பேசியிருந்தார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “அற்புதமான கூட்டணி அருமையான கூட்டணி தெளிவான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைந்திருக்கிறார்.
மத்தியில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார்கள். எங்கே சொன்னார்கள்?. யார் சொன்னார்கள்?. தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சி தான் நடைபெறும். அதிமுக கூட்டணி ஆட்சி என்று சொன்னால் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்பது தான் அர்த்தமே ஒழியே, அதிமுகவுடைய தலைமையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் வரும். மெஜாரிட்டி (பெரும்பான்மை) சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவின் முதலமைச்சராக மக்களின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார். எல்லா சமுதாய மக்களையும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியைத் தாண்டி இங்கே எந்த வாதத்துக்கும் இடம் இருக்காது” எனப் பேசினார்.