Skip to main content

என் முன்னாடி உட்காரக்கூடாது... பஞ்சாயத்து ஆபிஸுக்கு வந்த அவ்வளவுதான்... ஊராட்சி பெண் தலைவரைச் சாதி கூறி மிரட்டிய அதிமுக பிரமுகர்!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

admk


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள அத்திக்காட்டானூர் காட்டு வலவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். தாரமங்கலம் ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளராக இருக்கிறார். இவருடைய மனைவி அம்சவள்ளி. இவர், டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த மோகன், சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவராகவும், டி.கோணகாபாடி ஊராட்சியில் 5- ஆவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இவருடைய மனைவி நிரஞ்சனா, இந்த ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர்.
 

இதுவரை பொதுத் தொகுதியாக இருந்துவந்த டி.கோணகாபாடி ஊராட்சி, சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது பட்டியல் சமூகத்திற்கான ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட்டது. அதையடுத்து, முதல்முறையாகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அம்சவள்ளி இந்த ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிபெற்றார். இந்த அம்சவள்ளியைத்தான், சாதிப்பெயரைச் சொல்லி மோகன் ஆபாசமாகத் திட்டியதாகப் புகார் பதிவாயிருக்கிறது. இதுகுறித்து அம்சவள்ளி கையெடுத்துக் கும்பிட்டபடி, 'காவல்துறை மோகன்மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வதாக' கண்ணீர்மல்க கூறிய காணொலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரபரப்பைக் கூட்டியது.

''கடந்த 6.1.2020- இல் நான் டி.கோணகாபாடி ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டேன். ஜன.10- ஆம் தேதி, என்னுடைய அலுவலகத்திற்குச் சென்று தலைவருக்கான நாற்காலியில் அமர்ந்தேன். 5-வது வார்டு உறுப்பினரான மோகன், எடுத்த எடுப்பிலேயே ஆவேசமாக என் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு, ஆபாசமாகத் திட்டி சீட்டில் உட்காரக்கூடாது என்று ஒருமையில் மிரட்டினார். அந்த இருக்கை, அதற்கு முன்பு அவருடைய மனைவி நிரஞ்சனா தலைவராக இருந்தபோது உட்கார்ந்ததாம். அதனால் அதில் பிற சாதிக்காரர்கள் அமரக்கூடாது என்று கத்தினார்.

மோகன் தரக்குறைவாக திட்டியதால் நான் அழுதுகொண்டே அந்த அறையைவிட்டு வெளியே வந்துவிட்டேன். மறுபடியும், பஞ்சாயத்து ஆபீஸ் பக்கம் வந்தால் குடும்பத்தோட கொளுத்திடுவேன்னு மிரட்டினார். ரெண்டே மாசத்துல முடிச்சிருப்பேன். கரோனா வந்துட்டதால தப்பிச்சிட்டீங்கனு கொலைமிரட்டல் விடுத்தார்.
 

 

admk



எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட சிலோன் அகதிகள் குடியிருப்பில் குடிநீர் பிரச்னை இருப்பதால், புதிதாக குடிநீர் குழாய்ப் பதிக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஏப். 22- ஆம் தேதியன்று, மோகனுக்குச் சொந்தமான தேங்காய்நார் மில் அருகிலிருந்து குழாய் பதிக்கும் பணிகளுக்காக ஊராட்சி செயலாளர், டேங்க் ஆபரேட்டர் முனியன் ஆகியோருடன் நானும் கணவரும் சென்றிருந்தோம். அங்கு வந்த மோகன், எங்களை மேற்கொண்டு பணிகளைச் செய்யவிடாமல் தடுத்ததோடு, மீண்டும் என்னையும், கணவரையும் சாதிப் பெயரைச் சொல்லியும், ஆபாசமாகவும் திட்டினார். அப்போது தாரமங்கலம் போலீஸ்காரர் ஒருவரும் அங்கே இருந்தார். ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. அதன்பிறகுதான் மோகன் மீது ஏப். 23- ஆம் தேதி தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்'' என்றார்.

அம்சவள்ளியின் கணவர் அளித்த புகாரின் பேரில், மோகன் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளில் தாரமங்கலம் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இந்த எப்.ஐ.ஆர். அன்றிரவு 8 மணிக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாள் இரவு 8.45 மணிக்கு, ஏளங்காடு காலனியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மோகனின் ஆதரவாளரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவருமான தனபால் ஒரு புகாரளிக்க டி.கோணகாபாடி ஊராட்சிமன்றத் துணைத்தலைவரான பிரபு மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டப் பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர். போடப்பட்டி ருக்கிறது.
 

''தனபால் என்பவர் அத்திக்காட்டானூர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக இருக்கிறார். அவரும் எங்கள் சாதியைச் சேர்ந்தவர்தான். எங்கள் ஊராட்சியின் துணைத்தலைவர் பிரபுவும், நானும் சேர்ந்துகொண்டு தனபாலை தாக்கியதாகவும், அவரை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் பொய்யான புகார் அளித்திருக்கிறார். பிரபு என் நண்பர் என்பதால், அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகாரளித்தால், அவருக்காக நான் மோகன் மீதான புகாரை வாபஸ் பெற்றுவிடுவேன் என்று கருதி மோகனின் தூண்டுதலால் இவ்வாறு புகாரளித்துள்ளார்'' என்கிறார் அம்சவள்ளியின் கணவரான சதீஷ்குமார்.

இது ஒருபுறமிருக்க, ஓராண்டுக்கு முன்பு தாரமங்கலத்திலுள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் பெண் ஊழியர் ஒருவரை, போலீசார் முன்னிலையிலேயே மோகன் ஒருமையில் ஆபாசமாகத் திட்டித்தீர்க்கும் காணொலிப்பதிவும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
 

http://onelink.to/nknapp


இப்பிரச்சனை தொடர்பாக மோகனிடம் விளக்கம் கேட்டோம். "நான் யாரையும் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டவில்லை. பஞ்சாயத்து தலைவர் பொறுப்பிலிருந்துகொண்டு அம்சவள்ளியும், அவருடைய கணவரும் போலி பில் போட்டு ஊழல் செய்கின்றனர். அவர்கள் ஊழல் செய்வதற்கு நான் இடைஞ்சலாக இருப்பதால், என்மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக ஒரு புகாரை ஜோடித்துள்ளனர்'' என்கிறார்.

எந்தத் தரப்பில் உண்மையிருக்கிறதென விசாரித்து, முதல்வர் தனிப்பட்ட அக்கறை செலுத்தும் சேலம் மாவட்டத்தில் சாதிய வன்மம் தலையெடுக்காமல் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுப்பதுதான் தமிழ்ச் சமூகத்துக்கு நல்லது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.