Skip to main content

இனி சமூக நீதி குறித்து எப்படி பேசமுடியும்? அதிமுக - பாமகவை தாக்கிய தலைவர்கள்

Published on 26/02/2019 | Edited on 26/02/2019



 

தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜக - அதிமுக - பாமக கூட்டணியை கடும் விமர்சனம் செய்தனர்.  
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், 
 

''அதிமுகவுக்கு எந்த கொள்கையும் குறிக்கோளும் கிடையாது என அனைவரும் சொல்கிறார்கள். அது உண்மை கிடையாது. அவர்களுக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. தினமும் பெட்டி பெட்டியாக பணத்தை வாங்கி குவிக்க வேண்டும் என்பதுதான் அந்த கொள்கை. பணத்திற்காக அவர்கள் எதையும் செய்ய துணிவார்கள். அதன் அடிப்படையில் தான் மதவெறி கட்சியான பாஜகவோடு கூட்டணி சேர்ந்து, நாட்டையும் நாட்டுமக்களையும் நாசப்படுத்துகின்றனர்.
 

அவர்களோடு அதே குறிக்கோளுடைய பாமகவும் கூட்டு சேர்ந்துள்ளது. வன்னியர் சமுக மக்களின் காவலர் என கூறிவரும் மருத்துவர் ராமதாஸ் ஒரு செய்தியை பகிரங்கமாக பதிவு செய்தார். அதில், "நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம். அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்" என்றார். அவரின் குடும்பமே போட்டியிட போகிறது. போட்டியிட்டது. இப்போ அவரை என்ன செய்யலாம்? என்பதை உங்களின் கருத்தாகவே விடுகிறேன்" என முடித்தார்.
 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன்,
 

"கார் உள்ளளவும், பார் உள்ளளவும், தமிழ் உள்ள அளவும், திராவிடர் கட்சிகளோடு கூட்டு சேர மாட்டோம் என்று கூறிவிட்டு தற்போது கூட்டு சேர்ந்து விட்டது பாமக. அவர்கள் சமூக நீதியின் காவலர்கள் அல்ல, சமுநீதியின் துரோகிகள்" என்றார்.
 

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், "சமூக நீதிக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், அதனை ஒட்டிய திராவிட முன்னேற்ற கழகம், எப்போதுமே மக்கள் மீது அக்கறைக்கொண்ட பொதுவுடமைக் கட்சிகள் இருக்கிற அணியில் இல்லாமல், சனாதன தர்மத்தை ஆதரிக்கின்ற பாரதிய ஜனதா கட்சி இருக்கிற அணியில் சமூகநீதி பேசுகிற பாட்டாளி மக்கள் கட்சி சேருகிறது என்று சொன்னால், அவர்களின் சந்தர்ப்பவாதம் என்ன என்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 
 

தங்களுடைய கொள்கைகளை அவர்களே குழிதோண்டி புதைத்துவிட்டார்கள், அவமானகரமான நிலைமையை அந்த கட்சி எடுத்துவிட்டது. இதற்குமேல் சமூக நீதி குறித்து எப்படி பேசமுடியும், அதில் வெற்றி கொள்ள முடியும். சமூக நீதிக்காக போராடுகிறவர்கள் என சொல்லிக் கொள்கிறவர்கள் இவ்வளவு சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டால் அவர்களுக்கு அரசியலில் கருத்துகள் என்பது முக்கியமல்ல, சுயநலம் மட்டுமே முக்கியம் என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது" என்று முடித்தார்.
 

meeting


 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ''தேர்தல்தான் முக்கியம், வெற்றிதான் முக்கியம் என்றால் பாரதிய ஜனதாவோடும் கூட்டணி வைக்க முடியும். பாட்டாளி மக்கள் கட்சியோடும் கை கைகோர்த்துக் கொள்ள முடியும். இந்தியாவிலேயே இப்படி உள்ள இரண்டு கட்சிகளின் பெயரைச் சொல்லி இவர்களோடு கூட்டணி சேரமாட்டோம் என்று சொல்லுகிற துணிச்சல் விடுதலை சிறுத்தைகளுக்கு மட்டுமே உள்ளது'' என்றார்.
 

காதர்மொய்தீன் பேசுகையில். "மத்திய அரசுக்கு இபிஎஸ் துணை போகிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். அதுபோல் இப்போதுள்ள அதிமுக புலி வேட்டைக்கு சென்று வெறிநாயுடன் வந்துள்ளது. மத்தியில் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு காவடி தூக்கி வரும் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை மக்களாக மதிக்கக்கூடிய ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் வரவேண்டுமானால் பாஜக விரட்டியடிக்கப்பட வேண்டும். 'கோ பேக் மோடி' என்ற வாசகத்தை வார்த்தையில் மட்டும் சொல்லாமல் வாக்குகளாக மாற்றிக் காட்ட வேண்டும்" என்று முடித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.