தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டன் 07.08.2019 புதன்கிழமை நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு காரணம், கேபிள் கட்டணம் குறைப்பு பற்றி முதல்வர் தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்றும், கால்நடை அமைச்சர் மற்றும் கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மனுமான உடுமலை ராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டி பேசியதும் தான் அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மன் பதவியில் அமர வைத்தது குறித்து எடப்பாடிக்கும், மணிகண்டனுக்கும் பிரச்னை ஏற்பட்டது தான் பெரிய காரணமாக சொல்லப்பட்டது.

Advertisment

admk

இதனையடுத்து அவர் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்தார். அந்த சந்திப்பிலும் எந்த ஒரு பலனும் இல்லை என்று மணிகண்டன் கருத்தியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடியிடம் கடைசி முறையாக இது பற்றி பேச மணிகண்டன் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்த ஒரு முடிவும் வரவில்லை என்றால் திமுக கட்சியில் மணிகண்டன் இணைய உள்ளதாக செய்திகள் வருகின்றன. மேலும் திமுக தலைமையை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் உலா வருகின்றன. இதனால் ஆளும் தரப்புக்கு சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் பலம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர். வருகிற இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றால் திமுகவின் பலம் சட்டசபையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மணிகண்டனின் இந்த நடவடிக்கையால் அதிமுக தலைமை டென்ஷனில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.