Skip to main content

''கறுப்பர் கூட்டத்தின் அரசியல் சதியை முறியடிப்போம்!” -பொங்கிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
admk minister rajendrabalaji pressmeet

 

“மதக் கலவரங்களை தூண்டிவிடும் செயலில் ஈடுபட்டுள்ள கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது..” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இன்று விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறினார்.

 

“உலகமே கரோனா வைரஸ் தாக்குதலால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. உதவி செய்கின்ற சூழ்நிலையில், கரோனா வைரஸானது, அனைத்து மதங்களையும் மனிதநேயத்துடன் ஒன்றிணைத்துள்ளது. இந்துக்கள் மரணமடைந்தால் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு உடல் அடக்கம் செய்கின்றனர். இஸ்லாமியர்கள் மரணமடைந்தால் இந்துக்கள் கலந்து கொண்டு உடல் அடக்கம் செய்கின்றனர். இந்த நேரத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல்,  மதவாரியாக மக்களைப் பிரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் ஒரு அரசியல் சதி இருக்கிறது. அந்த சதியை இந்த அரசு முறியடிக்கும். யூடியூப் சேனலில் தவறாக பதிவு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதக்கலவரங்களை உருவாக்குவதற்காகவே அந்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்தக் கடவுள்களையும் இழிவாக பேசுவது,  காண்பிப்பது கண்டிக்கத்தக்கது.

 

பிரச்சனைகள் வராதா என்று காத்திருக்கும் கூட்டம்தான் திமுக கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் தகுதியை ஏற்கனவே இழந்துவிட்டார். தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடியார் ஆட்சியை வசைபாடும் ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தினமும் ஒரு அறிக்கை என்ற அடிப்படையில் அதிமுக அரசு மீது ஸ்டாலின் பொய்யான தகவல்களைக் கொடுத்து அரசியல் செய்து வருகின்றார். 16 மணி நேர மின் தடையை ஏற்படுத்தி,  தமிழகத்தை இருளில் மூழ்கடித்த திமுகவுக்கு, மின் கட்டணத்தை காரணமாக வைத்து போராட்டம் நடத்த தகுதி கிடையாது. பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது; மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் நடைபெற்ற அவலநிலையை மக்கள் மனதில் வைத்துக்கொண்டுதான், ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் அதிமுகவிற்கு கொடுத்துள்ளனர்.

 

admk minister rajendrabalaji pressmeet

 

அம்மாவுக்கு பிறகு எடப்பாடியார் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வருகின்றார். தமிழகத்தில் பிரச்சனைகளை உருவாக்கி, ஸ்டாலின் அரசியல் செய்து வருகின்றார். தமிழக மக்கள் மீதும் தமிழ் மீதும் பாரத பிரதமர் மோடி மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். தமிழுக்கு எதிராக மோடி ஒரு கணமும் செயல்பட மாட்டார். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஆகையால் மத்திய, மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்.

 

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடியார் உத்தரவிற்கிணங்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் முதலில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால்தான், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. லாக்டவுனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. ஆகையால், தேவைப்படும் பகுதியில் லாக்டவுன் செய்யப்படுள்ளது.  

 

சிலர் போலியான சங்கத்தை வைத்துக்கொண்டு ஆவின் நிர்வாகத்தை பற்றி குறைகூறி வருகின்றனர். கரோனா பாதிப்பு வந்தததில் இருந்து, கடந்த 4 மாதங்களில் எங்கும் ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது. தனியார் பால் கம்பெனிகள் அனைத்தும் மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். தனியார் பால் கம்பெனிகளுக்கு பால் ஊற்றியவர்களிடம், அவர்களது நலன் கருதி ஆவின் நிர்வாகம் பால் வாங்கி வருகின்றது. இதனால் 33 லட்சம் லிட்டர் கொள்முதல்,  இன்று 40 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, பாலை பவுடர் ஆக்கி வி்ற்பனை செய்து வருகின்றோம். கரோனா வைரஸ் தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்களை சேர்த்து புதிய மோரை ஆவின் தயாரித்துள்ளது.  இதன் விற்பனையை,  தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். தற்போதுகூட சிங்கபூருக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்து வருகின்றோம். விவசாயிகளின், அடித்தட்டு மக்களின் கஷ்டங்களைத் தெரிந்த காரணத்தினால்,  ஒவ்வொரு திட்டத்தையும், பயன்பெறும் வகையில் எடப்படியார் அரசு செயல்படுத்தி வருகின்றது. விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வராது என்று சொன்னார்கள் ஆனால் கொடுத்த வாக்குறுதிப்படி,  மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்துள்ளோம் தற்போது 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. திமுக ஆட்சி போன்று,  திட்டங்களை அறிவித்துவிட்டு கிடப்பில் போடுவது கிடையாது. ஏழை,  எளிய மக்கள் நன்மைக்காக திட்டங்களைத் தீட்டி, சட்டங்களை இயற்றி, மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் எடப்பாடியார் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. எதிர்கட்சிகள் குறித்து பொருட்படுத்தாமல், எங்களுடைய கவனம் மக்கள் நன்மைக்கானதாகவே இருக்கும். இந்த ஆட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும், முதல்வர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார்.”  என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.