Skip to main content

அமைச்சருக்கு 'கல்தா' கொடுக்கும் வக்கீல்! - கலக்கத்தில் அதிமுகவினர்!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

ADMK member petitioned viralimalai


ஜெ. பிறந்த நாளான 24ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதனால், 24ஆம் தேதி காலை முதல் அதிமுக சென்னை தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்பமனுவை பெற்று தாக்கல் செய்துவருகின்றனர். மனுக்களைப் பெற்றதும் எம்.ஜி.ஆர், ஜெ. சிலைகளிடம் வைத்து ஆசி பெற்று மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அதில் ஒரு மனு, அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதிக்கு, ஆலங்குடித் தொகுதியைச் சேர்ந்தவர் கேட்டிருப்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர் தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் நெவளிநாதன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவராக இருந்தவர். தற்போது, புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவராக இருக்கிறார். இன்று, ஆலங்குடி தொகுதிக்கு விருப்பமனு படிவத்தை வாங்கியவர் தொடர்ந்து அமைச்சரின் தொகுதியான விராலிமலைக்கும் விருப்பமனு வாங்கியதோடு அதை முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி புதுக்கோட்டை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

அமைச்சர் விஜயபாஸ்கர், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்ப மனுத் தாக்கல் செய்து வரும் நிலையில், நெவளிநாதன் அமைச்சரின் விராலிமலைத் தொகுதிக்கு விருப்ப மனு பெற்றிருப்பது அமைச்சரின் ஆதரவாளர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. இவர்களின் கோபத்திற்கு காரணம், விராலிமலை தொகுதியைப் பொருத்தவரை பல ஆயிரம் கோடிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் நடக்க காரணமாக இருப்பவர் அமைச்சர். தற்போதுகூட காவிரி-தெற்கு, வெள்ளாறு, வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சரை அழைத்துவந்து பிரமாண்டமாக தொடக்கவிழாவும் நடத்தினார். அதேபோல் தன் பெயரில் உள்ள சி.வி.பி. பேரவையின சார்பில் சொந்தச் செலவில் சில கோடிகளில், சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு ‘விஜயபாஸ்கர் வீட்டுப் பொங்கல் சீர்’ என வழங்கினார். மேலும் விளையாட்டு உபகரணங்கள், தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் எனத் தொகுதி முழுக்க அரசுப் பணமின்றி தன் சொந்தச் செலவில் வழங்கினார். மேலும் சமீபத்தில் தொகுதி முழுக்க கோலப்போட்டிகளை நடத்தினார். இப்படி தன் தேர்தல் பணியைப் பல மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்ட அமைச்சர், இந்த முறை தன்னை எதிர்த்து யாரும் சீட் கேட்க மாட்டார்கள் என நினைத்திருந்தார். ஆரம்ப நாளிலேயே அவரின் தொகுதிக்கு, அடுத்த தொகுதியைச் சார்ந்த ஒருவர் பணம் கட்டியது அமைச்சரின் ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்றாக அமைந்து விட்டது. 

 

இது குறித்து விராலிமலை தொகுதிக்கு விருப்பமனு பெற்றுள்ள வழக்கறிஞர் நெவளிநாதன், “நான் யாருக்கு எதிராகவும் பணம் கட்டவில்லை. அந்த தொகுதியில் நிற்க விரும்பித்தான் விருப்பமனுவை வாங்கியுள்ளேன். நான் வசிக்கும் ஆலங்குடிக்கும் வாங்கியுள்ளேன். கட்சித் தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு கொடுத்தாலும் நிச்சயம் வெற்றிபெறுவேன். நான் விராலிமலையை விரும்புவதற்கு காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு அரசின் வளர்ச்சிப் பணிகள் இங்கு நடந்துள்ளது. இந்தத் தொகுதி ஏற்படுத்தப்பட்டதில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தான் கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றாலும் தேர்தலில் சமூகம் சார்ந்த ஓட்டுகளும் முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்தத் தொகுதியில் நான் சார்ந்த முத்திரையர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மக்களிடம் தங்களுக்கான அரசியல் அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்கின்ற ஒரு ஏக்கம் இருக்கிறது. மேலும், ஏறத்தாழ 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தில் ஏற்கனவே 3 தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ஒருவருக்கே 4வது முறையாக வாய்ப்பு கொடுப்பதைவிட புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்க கட்சித் தலைமை முடிவுசெய்து அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினால் அமைச்சரின் ஆதரவோடும், அந்த தொகுதியில் இருக்கும் கழக நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் வெற்றிபெற்று வெற்றிக்கனியை தலைமையிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். மேலும், “விருப்ப மனுவை விராலிமலை முருகன் கோயிலில் வைத்துத் தரிசனம் செய்தபிறகு, மார்ச் 3ஆம் தேதி தாக்கல் செய்யப் போகிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.