Skip to main content

அமைச்சருக்கு 'கல்தா' கொடுக்கும் வக்கீல்! - கலக்கத்தில் அதிமுகவினர்!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

ADMK member petitioned viralimalai


ஜெ. பிறந்த நாளான 24ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதனால், 24ஆம் தேதி காலை முதல் அதிமுக சென்னை தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்பமனுவை பெற்று தாக்கல் செய்துவருகின்றனர். மனுக்களைப் பெற்றதும் எம்.ஜி.ஆர், ஜெ. சிலைகளிடம் வைத்து ஆசி பெற்று மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அதில் ஒரு மனு, அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதிக்கு, ஆலங்குடித் தொகுதியைச் சேர்ந்தவர் கேட்டிருப்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர் தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் நெவளிநாதன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவராக இருந்தவர். தற்போது, புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவராக இருக்கிறார். இன்று, ஆலங்குடி தொகுதிக்கு விருப்பமனு படிவத்தை வாங்கியவர் தொடர்ந்து அமைச்சரின் தொகுதியான விராலிமலைக்கும் விருப்பமனு வாங்கியதோடு அதை முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி புதுக்கோட்டை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

அமைச்சர் விஜயபாஸ்கர், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்ப மனுத் தாக்கல் செய்து வரும் நிலையில், நெவளிநாதன் அமைச்சரின் விராலிமலைத் தொகுதிக்கு விருப்ப மனு பெற்றிருப்பது அமைச்சரின் ஆதரவாளர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. இவர்களின் கோபத்திற்கு காரணம், விராலிமலை தொகுதியைப் பொருத்தவரை பல ஆயிரம் கோடிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் நடக்க காரணமாக இருப்பவர் அமைச்சர். தற்போதுகூட காவிரி-தெற்கு, வெள்ளாறு, வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சரை அழைத்துவந்து பிரமாண்டமாக தொடக்கவிழாவும் நடத்தினார். அதேபோல் தன் பெயரில் உள்ள சி.வி.பி. பேரவையின சார்பில் சொந்தச் செலவில் சில கோடிகளில், சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு ‘விஜயபாஸ்கர் வீட்டுப் பொங்கல் சீர்’ என வழங்கினார். மேலும் விளையாட்டு உபகரணங்கள், தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் எனத் தொகுதி முழுக்க அரசுப் பணமின்றி தன் சொந்தச் செலவில் வழங்கினார். மேலும் சமீபத்தில் தொகுதி முழுக்க கோலப்போட்டிகளை நடத்தினார். இப்படி தன் தேர்தல் பணியைப் பல மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்ட அமைச்சர், இந்த முறை தன்னை எதிர்த்து யாரும் சீட் கேட்க மாட்டார்கள் என நினைத்திருந்தார். ஆரம்ப நாளிலேயே அவரின் தொகுதிக்கு, அடுத்த தொகுதியைச் சார்ந்த ஒருவர் பணம் கட்டியது அமைச்சரின் ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்றாக அமைந்து விட்டது. 

 

இது குறித்து விராலிமலை தொகுதிக்கு விருப்பமனு பெற்றுள்ள வழக்கறிஞர் நெவளிநாதன், “நான் யாருக்கு எதிராகவும் பணம் கட்டவில்லை. அந்த தொகுதியில் நிற்க விரும்பித்தான் விருப்பமனுவை வாங்கியுள்ளேன். நான் வசிக்கும் ஆலங்குடிக்கும் வாங்கியுள்ளேன். கட்சித் தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு கொடுத்தாலும் நிச்சயம் வெற்றிபெறுவேன். நான் விராலிமலையை விரும்புவதற்கு காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு அரசின் வளர்ச்சிப் பணிகள் இங்கு நடந்துள்ளது. இந்தத் தொகுதி ஏற்படுத்தப்பட்டதில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தான் கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றாலும் தேர்தலில் சமூகம் சார்ந்த ஓட்டுகளும் முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்தத் தொகுதியில் நான் சார்ந்த முத்திரையர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மக்களிடம் தங்களுக்கான அரசியல் அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்கின்ற ஒரு ஏக்கம் இருக்கிறது. மேலும், ஏறத்தாழ 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தில் ஏற்கனவே 3 தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ஒருவருக்கே 4வது முறையாக வாய்ப்பு கொடுப்பதைவிட புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்க கட்சித் தலைமை முடிவுசெய்து அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினால் அமைச்சரின் ஆதரவோடும், அந்த தொகுதியில் இருக்கும் கழக நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் வெற்றிபெற்று வெற்றிக்கனியை தலைமையிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். மேலும், “விருப்ப மனுவை விராலிமலை முருகன் கோயிலில் வைத்துத் தரிசனம் செய்தபிறகு, மார்ச் 3ஆம் தேதி தாக்கல் செய்யப் போகிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.