Skip to main content

அழைப்பு விடுத்த அ.தி.மு.க.; தொல். திருமாவளவன் எம்.பி. பதிலடி!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையொட்டி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி வி.சி.க. உடன் தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தது.

ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

இத்தகைய சூழலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் அதிக இடங்கள் கிடைக்கும். வி.சி..க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. 3 மக்களவைத் தொகுதிகளை கேட்டு வருகிறது. தி.மு.க. 3 தொகுதிகளை தர மறுப்பதால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத சூழல் நிலவி வருகிறது. இதனால் தி.மு.க. கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். அவ்வாறு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் வி.சி.க.வுக்குத்தான் லாபம். வி.சி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் கூடுதல் தொகுதி கிடைக்கும். தி.மு.க. கூட்டணியில் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி இருந்தால் அதிமுகவுக்கு வரலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தென் மாநில வி.சி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (05.03.2024) நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநில நிர்வாகிகளும், புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் இணையம் வாயிலாக கேரள மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தெலங்கானாவில் பத்து நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஆறு இடங்களிலும், கேரளாவில் இடுக்கி உட்பட மூன்று தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறோம்.

ADMK made the call thol Thirumavalavan MP Retaliation

எங்கள் மீதுள்ள கரிசனத்துக்கும் அக்கறைக்கும் ஜெயக்குமாருக்கும் அ.தி.மு.க.வுக்கும் வி.சி.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை பொறுத்தவரை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் முதன்மையானது. தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு என்கிற அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கப் போவதில்லை. நாட்டு நலன் கருதி மக்கள் நலன் கருதி இந்தத் தேர்தலை ஒரு கருத்தியல் போராக அணுகுகிற காரணத்தினால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணித்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவதற்கு வாய்ப்பில்லை. போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விரும்பியதைப் போன்று இருக்கலாம். விருப்பத்திற்கு மாறாகவும் இருக்கலாம். எங்கள் விருப்பத்தைவிடவும் பாஜகவிடம் இருந்து இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்பதே மேலானதாக இருக்கிறது என நம்புகிறோம். அதன் அடிப்படையில் எங்கள் முடிவுகள் இருக்கும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.