Skip to main content

அதிமுக தலைமை யாருக்கு? மோடி வைக்கும் செக்; எடப்பாடிக்கு நிர்வாகிகள் தந்த ஆலோசனை

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Admk leader posting issue

 

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஜூலை 11-இல் கூடி, எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. அது 4 மாதத்திற்கு நீடிக்கும் என்றும், அதற்குள் மறுபடியும் பொதுக்குழு கூடி முறைப்படி அவரைத் தேர்ந்தெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தத் தடை விதித்திருக்கிறது. இந்தச் சூழலில் எடப்பாடியின் 4 மாத பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் அடுத்து என்ன செய்வது என்ற பதைபதைப்போடு தன் வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். அதேபோல் ஓ.பி.எஸ்.ஸின் அ,தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியும் செப்டம்பர் 22 ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. இதனால், ஓ.பி.எஸ்.ஸின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இ.பி.எஸ்.ஸின் தற்காலிகப் பொதுச்செயலாளர் பதவியும் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் அ.தி.மு.க.வின் அதிகார நாற்காலி அந்தரங்கத்தில் தொங்குகிறது.  

 

இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசிய போது, காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு டெல்லிக்குச் செல்ல, மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்த மோடியை, வழியனுப்பி வைக்க எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் வந்தனர். இருந்தும் ஒருவரை ஒருவர் பார்க்காத மாதிரியே நடந்துகொண்டனர். அதேபோல் மோடியுடன் 10 நிமிடமாவது தனியாகப் பேச வேண்டும் என்று இருவருமே காத்திருந்தனர். ஆனால் மோடியோ அதற்கு இடம் வைக்கவே இல்லை. போதாக்குறைக்கு, அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்து அவர் ஒன்றிணைக்க, எடப்பாடி அதிர்ந்து போய்விட்டார். இதன்மூலம் இருவரும் இணைந்திருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை மோடி உணர்த்தினார். மோடியின் இந்தத் திடீர் செயலை ஓ.பி.எஸ்.ஸும் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர்.

 

Admk leader posting issue

 

மேலும், இதுகுறித்து அறிய எடப்பாடி தரப்பில் சிலரை விசாரித்தபோது, சென்னை திரும்பிய எடப்பாடியை அவர் அணியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளும், மா.செ.க்களும் சந்தித்தனர். அப்போது எடப்பாடி, மோடி என்ன செஞ்சார் தெரியுமான்னு கேட்க, ஆமாம் கேள்விப்பட்டோம். கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறோம் என்று நீங்க பல முறை நிரூபித்திருக்கிறீர்கள். அதோடு ஓ.பி.எஸ்.ஸை இனி அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் நீங்கள் வெளிப்படையாகவே சொல்லிவிட்டீர்கள். அப்படியிருந்தும் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மோடி ஏன் நெருக்கடி தருகிறார்? இனி அவரை நீங்களாகப் போய் எங்கேயும் சந்திக்கக் கூடாது. தனிப்பட்ட சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினால் மட்டும் பாருங்க என ஆலோசனை சொல்லியிருக்காங்க. இதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, அடுத்ததா சென்னை வந்த அமித்ஷாவைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார் என்கின்றனர்.

 

Admk leader posting issue

 

மேலும் விசாரித்தபோது, மக்களின் அனுதாபம் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருப்பதாகவும், எடப்பாடியும் அவருடன் சேர்ந்தால் அ.தி.மு.க. பலமாக இருக்கும் என்று ஆடிட்டர் குருமூர்த்தியும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும், பா.ஜ.க. தரப்புக்குத் தொடர்ச்சியாகத் தகவல் கொடுத்து வருகிறார்கள். அதோடு ஓ.பி.எஸ். தனது டெல்லி லாபி மூலம், மோடியிடம் தன்னை நல்ல மாதிரி பதியவைத்திருக்கிறார். இதையெல்லாம் அறிந்து ஓ.பி.எஸ்., ரவீந்திரன் துரைசாமி மீது கடுப்பில் இருக்கும் எடப்பாடி, அவர்களைத் தன் மகன் மிதுன் தலைமையில் இயங்கும் ஐ.டி. விங்க் மூலம் கடுமையாக அட்டாக் பண்ணி வருகிறார் என்கின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.