Skip to main content

அதிமுக தலைமை யாருக்கு? மோடி வைக்கும் செக்; எடப்பாடிக்கு நிர்வாகிகள் தந்த ஆலோசனை

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Admk leader posting issue

 

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஜூலை 11-இல் கூடி, எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. அது 4 மாதத்திற்கு நீடிக்கும் என்றும், அதற்குள் மறுபடியும் பொதுக்குழு கூடி முறைப்படி அவரைத் தேர்ந்தெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தத் தடை விதித்திருக்கிறது. இந்தச் சூழலில் எடப்பாடியின் 4 மாத பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் அடுத்து என்ன செய்வது என்ற பதைபதைப்போடு தன் வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். அதேபோல் ஓ.பி.எஸ்.ஸின் அ,தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியும் செப்டம்பர் 22 ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. இதனால், ஓ.பி.எஸ்.ஸின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இ.பி.எஸ்.ஸின் தற்காலிகப் பொதுச்செயலாளர் பதவியும் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் அ.தி.மு.க.வின் அதிகார நாற்காலி அந்தரங்கத்தில் தொங்குகிறது.  

 

இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசிய போது, காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு டெல்லிக்குச் செல்ல, மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்த மோடியை, வழியனுப்பி வைக்க எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் வந்தனர். இருந்தும் ஒருவரை ஒருவர் பார்க்காத மாதிரியே நடந்துகொண்டனர். அதேபோல் மோடியுடன் 10 நிமிடமாவது தனியாகப் பேச வேண்டும் என்று இருவருமே காத்திருந்தனர். ஆனால் மோடியோ அதற்கு இடம் வைக்கவே இல்லை. போதாக்குறைக்கு, அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்து அவர் ஒன்றிணைக்க, எடப்பாடி அதிர்ந்து போய்விட்டார். இதன்மூலம் இருவரும் இணைந்திருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை மோடி உணர்த்தினார். மோடியின் இந்தத் திடீர் செயலை ஓ.பி.எஸ்.ஸும் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர்.

 

Admk leader posting issue

 

மேலும், இதுகுறித்து அறிய எடப்பாடி தரப்பில் சிலரை விசாரித்தபோது, சென்னை திரும்பிய எடப்பாடியை அவர் அணியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளும், மா.செ.க்களும் சந்தித்தனர். அப்போது எடப்பாடி, மோடி என்ன செஞ்சார் தெரியுமான்னு கேட்க, ஆமாம் கேள்விப்பட்டோம். கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறோம் என்று நீங்க பல முறை நிரூபித்திருக்கிறீர்கள். அதோடு ஓ.பி.எஸ்.ஸை இனி அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் நீங்கள் வெளிப்படையாகவே சொல்லிவிட்டீர்கள். அப்படியிருந்தும் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மோடி ஏன் நெருக்கடி தருகிறார்? இனி அவரை நீங்களாகப் போய் எங்கேயும் சந்திக்கக் கூடாது. தனிப்பட்ட சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினால் மட்டும் பாருங்க என ஆலோசனை சொல்லியிருக்காங்க. இதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, அடுத்ததா சென்னை வந்த அமித்ஷாவைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார் என்கின்றனர்.

 

Admk leader posting issue

 

மேலும் விசாரித்தபோது, மக்களின் அனுதாபம் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருப்பதாகவும், எடப்பாடியும் அவருடன் சேர்ந்தால் அ.தி.மு.க. பலமாக இருக்கும் என்று ஆடிட்டர் குருமூர்த்தியும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும், பா.ஜ.க. தரப்புக்குத் தொடர்ச்சியாகத் தகவல் கொடுத்து வருகிறார்கள். அதோடு ஓ.பி.எஸ். தனது டெல்லி லாபி மூலம், மோடியிடம் தன்னை நல்ல மாதிரி பதியவைத்திருக்கிறார். இதையெல்லாம் அறிந்து ஓ.பி.எஸ்., ரவீந்திரன் துரைசாமி மீது கடுப்பில் இருக்கும் எடப்பாடி, அவர்களைத் தன் மகன் மிதுன் தலைமையில் இயங்கும் ஐ.டி. விங்க் மூலம் கடுமையாக அட்டாக் பண்ணி வருகிறார் என்கின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.