Skip to main content

எடப்பாடி சூழ்ச்சி! பிளவை நோக்கி அதிமுக! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

ADMK Leader position issue

 

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே நடந்த மோதல்களால் மீண்டும் அதிமுக உடையப் போகிறது என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள். 

 

அதிமுக தலைமைக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி கட்சியை உடைத்தவர் ஓபிஎஸ். பாஜக தலைவர்கள் எடுத்த முயற்சியில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டு அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை நீக்கினர். அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு அவைகளின் முறையே ஓபிஎஸ், இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த இரட்டைத் தலைமைக்கு கட்சியின் பொதுக்குழுவும் தலைமைத் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்தது. 


கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், எடப்பாடியின் ஆதிக்கமே கட்சிக்குள் இருந்து வந்தது. ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். அதற்கேற்ப கட்சியின் சீனியர்களும் மா.செ.க்களும் எடப்பாடிக்கு ஆதரவாக நின்றனர். ஓபிஎஸ்சும் மனப்புழுக்கத்திலே இருந்தார். அவரால் எடப்பாடியை எதிர்க்க முடியவில்லை. ஆட்சியை இழந்த நிலையிலும் எடப்பாடி தனது அதிகாரத்தை கட்சிக்குள் நிலை நிறுத்திக்கொண்டே வருகிறார். 


இந்த நிலையில் தான், கட்சி தேர்தலை நடத்தி வருகிறது அதிமுக. இதனை வைத்து, கட்சிக்குள் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும்;  மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க வேண்டும்; அந்த பதவியில் 'தான்' உட்கார வேண்டும் என்று காய்களை நகர்த்தி வந்தார் எடப்பாடி.  


இந்த சூழலின் பின்னணியில்தான், தேர்தல் ஆணைய விதிகளின்படி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை 23-ந் தேதி கூட்ட ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்தனர். 


அந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய  முக்கிய முடிவுகளைப் பற்றி விவாதிக்க இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். குறிப்பாக, ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டும் என எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர். இதனால், கூட்டத்தில் ஏகத்துக்கும் சலசலப்பு உருவானது. மோதல்கள் வெடிக்கும் சூழல். இறுதியில் ஓபிஎஸ்சும் அவரது தரப்பும் அமைதியானது. ஒற்றைத் தலைமைக்கான முடிவை எடுத்திருக்கிறார்கள். 


பொதுக்குழு உறுப்பினர்கள் 2,645 பேரில், பெரும்பான்மை எண்ணிக்கை எடப்பாடி தரப்பிடமே இருக்கிறது. இந்த பெரும்பான்மையை வைத்து, தன்னை பொதுச் செயலாளராக பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து சூழ்ச்சிகளையும் செய்து முடித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை வழங்க வேண்டி மா.செ.க்களுக்கு அறிவுறுத்தினார் எடப்பாடி. அதனை சீனியர்களும் ஒப்புக்கொள்ள, ஓபிஎஸ் மட்டும் இதனை எதிர்த்தார். அத்துடன், சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் ஓபிஎஸ். சிறப்பு அழைப்பாளர்கள் எனில் சுமார் 4,000 பேர் அனுமதிக்கப்படுவர். அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தனது ஆதரவாளர்களை பொதுக்குழுவுக்குள் கொண்டு சென்று விடலாம். அப்படி நடந்தால் பொதுக்குழுவில் ஏதேனும் எடப்பாடி தனக்கு ஆதரவாக மட்டுமே திட்டமிட்டால் தனது ஆட்களை வைத்து தடுக்கலாம் என யோசித்தே சிறப்பு அழைப்பாளர் பிரச்சனையை எடுத்தார் ஓபிஎஸ். ஆனால், இதனை எடப்பாடி தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. 


ஓபிஎஸ், கூட்டம் முடிந்ததும் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமையகத்திலிருந்து வெளியேறி தனது வீட்டுக்கு பறந்தார். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், 'எடப்பாடியின் சூழ்ச்சியை வீழ்த்த வேண்டும்; ஒற்றைத் தலைமையை ஏற்கக் கூடாது' என ஓபிஎஸ்சிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கட்சியின் சட்ட விதிகளும் ஆராயப்பட்டுள்ளன. 


இது குறித்து ஓபிஎஸ் தரப்பில் விசாரித்த போது, "பொதுச் செயலாளர் பதவி திருத்தப்பட்டு இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்ட போது, இருவரும் இணைந்தே முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதனால், எடப்பாடியும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே சேர்ந்து சட்ட விதிகளை திருத்திட முடியாது. அப்படி எந்த முடிவை எடுத்தாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் எதிர்ப்புத் தெரிவித்தால், எந்த முடிவுகளும் செல்லாது. அதையும் மீறி பொதுக்குழுவில் எடப்பாடி சூழ்ச்சி செய்தால் அதை எதிர்த்து மீண்டும் தர்ம யுத்தம் நடத்துவார். அதனால், இப்போதைய நிலையில், அதிமுக  மீண்டும்  பிளவை நோக்கி நகர்கிறது" என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.