admk head office opaneerselvam and supporters

Advertisment

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடியை ஏந்தியவாறு உள்ளே நுழைந்தார். அவருடன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கட்சி அலுவலகம் வந்தனர்.

முன்னதாக, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.வினர் 11 பேரும், காவல்துறையினர் 2 பேரும் காயமடைந்தனர்.

Advertisment

இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில், ராயப்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வருவாய் துறையினர் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் ஜெகஜீவன்ராம், காவல்துறையினருடன் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பின்னர், அங்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியே வந்து நுழைவு வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, வருவாய் கோட்டாட்சியர் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார். மேலும், அ.தி.மு.க. தலைமை அலுவலகப் பகுதியை சுற்றிலும் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கலைந்து செல்லவில்லையென்றால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.