Skip to main content

"மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம்" - அதிமுக நிர்வாகி 

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

admk erode district muriganatham talks about ops 

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

 

இபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தது. ஆனால், தேர்தலில் அதிமுக வெற்றி பெற தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தனர். தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்பினரின் பேச்சாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத நிலை வந்தது.

 

இந்நிலையில், அதிமுக ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். ஓ.பி.எஸ் அணியின் ஈரோடு மாவட்டச் செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் தங்கராஜ், ஈரோடு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முருகன், வர்த்தக அணி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் பழனிசாமி அணியில் இணைந்தனர்.

 

ஈரோடு மாவட்டச் செயலாளர் முருகானந்தம் இது குறித்துப் பேசுகையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் என்பவரை அறிவித்தபோது, மாவட்டச் செயலாளரான எனக்கு தெரியாமலே அறிவித்தார்கள். கட்சியில் மரியாதை இல்லை. செயல்படுத்துகிற இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. புகார்களை மதிப்பதில்லை. சரியான ஆட்கள் யாரும் ஓபிஎஸ்ஸிடம் இல்லை. வேட்பாளர் செந்தில் முருகன் என்பவரை நான் பார்த்தது கூட இல்லை. அவர் கட்சியின் உறுப்பினராக கூட இல்லை. மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளான எங்களை கலந்தாலோசிக்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு எங்களிடம் அவர்கள் எதுவுமே தெளிவுபடுத்தவில்லை. கட்சியில் மரியாதை கிடையாது. ஈரோடு மாவட்டத்தில் 106 பொறுப்பாளர்களை நியமித்தோம். அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். இப்போதைக்கு நாங்கள் 5 பேர் மட்டும் முடிவு எடுத்து உடனடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம்.  மரியாதை இல்லாத இடத்தில் எப்படி இருக்க முடியும். மரியாதைக்கு தான் அரசியல் செய்கிறோம். ஆனால் நாங்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். கஷ்டத்திற்கு ஒரு மதிப்பு வேண்டும். அந்த மதிப்பு ஓபிஎஸ் அணியில் இல்லை. இடைத்தேர்தலில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். ஆனால் வாய்ப்பு தரவில்லை. மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.