தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அந்த இடத்தில் உட்கார்வதற்காக திரிபாதியும் ஜாஃபர் சேட்டும் ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்திருந்த வழக்கை, கோர்ட் மூலம் ரத்து பண்ணியதால் ஜாஃபர் சேட்டின் பெயர் டி.ஜி.பி. பேனலில் இடம் பெற்றது. இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சில தகவல்களை அனுப்பியுள்ளாராம்.
அதாவது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்ததால் தனக்கு பல விவரங்கள் தெரியும்னும், அதனடிப்படையில் தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வேலைகளில் பா.ஜ.க.வுக்கு பக்கபலமாக இருப்பேன் என்பதுதான் ஜாஃபர் அனுப்பிய தகவலின் சாராம்சம். ஓய்வு பெறும் டி.கே.ராஜேந்திரனும் ஜாஃபருக்கு பல வழிகளிலும் துணை நிற்கிறாராம். ஏன்னா ஜெ. ஆட்சிக் காலத்தில் டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்ற ராமானுஜம், ஜெ.வின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதேபோல் டி.கே.ராஜேந்திரனை தனது ஆலோசகராக நியமிக்க எண்ணியுள்ளாராம் எடப்பாடி. ஆனால் டெல்லியிலிருந்து இதற்கான பாஸிட்டிவ் சிக்னல் கிடைக்கவில்லை. இந்த விஷயங்களையெல்லாம் ஐ.பி.எஸ். வட்டா ரங்களில் ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.