Skip to main content

“அதிமுகவுக்கும் கொள்கை இருக்கிறது..” - இ.பி.எஸ். 

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

"ADMK also has a policy.." - E.P.S.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் இன்று மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. இதே திமுக 1999ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லையா. அதே ஆட்சிக் காலத்தில் திமுக எம்.பி.க்கள் பாஜக கூட்டணியில் அமைச்சரவையில் இடம் பெறவில்லையா. ஆகவே திமுக தான் காலத்திற்கு ஏற்றதுபோல், நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடிய கட்சி. 

 

கூட்டணி என்பது அனைத்து கட்சிகளும், தேர்தல் வரும்போது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவகையில், அமைக்கின்ற நிகழ்வு அது அவ்வளவுதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. அந்தவகையில் அதிமுகவுக்கும் கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். 

 

முதல்வர் ஸ்டாலின், ‘நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்’ என்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரக்காலம் வந்தது. அதில் தான் மிசா வந்தது. அதில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும், பதவிக்கும் திமுகவும், ஸ்டாலினும், அவரது குடும்பமும் காங்கிரஸுக்கு அடிமையாக இருந்துகொண்டிருக்கிறது. 

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எங்கள் நிர்வாகிகளும், கட்சியினரும் அரும்பணி ஆற்றிக்கொண்டிருக்கிறோம். அமித்ஷா அவரது கருத்தை தெரிவிக்கிறார்; அதுவேறு. எங்களின் கருத்து இதுதான். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறும் சூழ்நிலை பிரகாசமாக இருக்கிறது. 

 

எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ஊழல் புரிந்த அமைச்சர் இன்று கைதாகியுள்ள நிலையில், அவரை தொடர்ந்து அமைச்சராக வைத்திருப்பேன் என்று சொல்வது மிக தவறு. கடந்த கால வரலாற்றில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஆலடி அருணா ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டபோது அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல், என்.கே.கே.பி. ராஜா வழக்கில் சம்பந்தப்பட்டபோது அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது ஒரு வழக்கு வந்தது அவரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

 

தமிழ்நாட்டிற்கு என்று ஒரு அரசியல் நாகரிகம் இருக்கிறது. அதனை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாடு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைப்பார்கள். இன்று சிறையில் இருப்பவர் அமைச்சராக இருந்தால் அது எப்படி சரியாக இருக்கும். எனவே இதனை ஒரு மோசமான உதாரணமாக பார்க்கிறோம். முதலமைச்சர் அரசியல் நாகரிகம் கருதி அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவிக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கிறார்கள்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.