Skip to main content

“காங்கிரஸ் கட்சியில் தலைமையும் இல்லை, தலைவரும் இல்லை” - நடிகை விந்தியா பிரச்சாரம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
actress Vindhya said Congress party has no leadership, no leader

பரங்கிப்பேட்டை அருகே பி. முட்லூர் பகுதியில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து வியாழக்கிழமை மாலை அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .

அப்போது, பேசிய நடிகை விந்தியா, “சிதம்பரம் தொகுதி ஈசனே ஆட்சி செய்கிற, தில்லை காளியம்மன், கோவிந்தராஜ பெருமாள் காத்து நிக்கிற இடம். காடு, கடல், ஆறு உள்ள வலிமையான பூமி. இங்கே நிற்பது புண்ணியம், பேசுவதே பெருமை. இங்கு நியாயம் ஜெயிக்கணும், மக்கள் ஜெயிக்கணும், வெற்றி வேட்பாளர் சந்திரகாசன் ஜெயிக்கணும்.

நாட்டுக்காகவும் ,மக்களுக்காகவும் கட்சி ஆரம்பித்து பணியாற்றுபவர்கள் ஏராளம். ஆனால் 2 சீட்டுக்காக இன மக்களை உசுப்பேத்தி கோபப்பட வைத்து ஏமாத்தி இன மக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் திருமாவளவன். இவருக்கு எலக்சன் நேரத்துல கலெக்சன் ஆகுற ஓட்டு பத்தி தான் தெரியும். இன மக்களைப் பற்றி கவலை இல்லை.

எப்ப பார்த்தாலும் புத்தர், அம்பேத்கர் என பேசுவார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதை அதிமுக அரசு அறிவித்ததை திமுக அரசு ரத்து செய்து விட்டது. திருமாவளவன் என்ன செய்தார். புத்தர் போல தவம் இருந்திருக்கலாம். அம்பேத்கர் மாதிரி புரட்சி செய்து இருக்கலாம். ஆனால் இவர் திமுகவிடம் அடிமையாக இருந்து வருகிறார்.

திருமாவளவன் செய்யறது ஒன்னு, சொல்றது ஒன்னு, கோவிலைப் பற்றி கேவலமா பேசுவாரு, தேர்தல் வந்தால் குனிந்து கும்பிடு போடுவார். காங்கிரஸ் தலைவர் பதவியை கொள்கைக்காக தூக்கி எறிந்த அம்பேத்கர் எங்கே? இனம் மானத்தை அடகு வைக்கும் திருமாவளவன் எங்கே?.  தமிழகத்தில் தாமரை எப்படி மலரக் கூடாதோ, அது மாதிரி திமுக கூட்டணியும் வளரக்கூடாது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டு பேருமே நாட்டுக்காகவோ, மக்களுக்காகவோ அரசியலில் இல்லை. சுயநலத்திற்காகவும் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர் கொள்கைக்காக இல்லை, கமலஹாசன் திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்தார்.

தற்பொழுது, ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் கைகட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். வைகோ தமிழ்நாட்டு அரசியலில் சிறந்த சைக்கோ. திமுகவை உடைத்து மதிமுக என்ற கட்சியை உருவாக்கினார். அதே திமுகவிடம் ஒத்த சீட்டு கேட்டு கைகட்டி நிற்கிறார். வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை. அவர் சேக்ஸ்பியர் முதல் சிலப்பதிகாரம் வரை கரைத்துக் குடித்தவர். ஸ்டாலினிடம் அவர்  கைகட்டி நிற்பது வருத்தமாக இருக்கிறது.

ஸ்டாலின் எவ்வாறு சாதி வெறி பிடித்தவர் என்று தெரியாதா? பெரம்பலூர் பொது தொகுதி என்பதால் ராசாவை நீலகிரிக்கு அனுப்பியவர். காங்கிரஸில் தலைமையும் இல்லை, தலைவர்களும் இல்லை. அதிமுக ஆட்சியின் போது மத சண்டை, சாதி சண்டை நடந்ததா? அமைதியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் மக்கள், மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்திவிட்டது.  

எனவே தமிழகத்தில் மீண்டும் வளமான ஆட்சி அமைய அடித்தளம் விடும் வகையில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு இரட்டை இலையில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார். சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன், அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.