Skip to main content

“தாத்தா எங்கே? பேரன் எங்கே?” - உதயநிதி குறித்து குஷ்பு பேச்சு!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

Actress kushboo public addressed pondicherry

 

மாநில பா.ஜ.க. சார்பில் 'காண்போம் இனியொரு நல்லாட்சி, காங்கிரஸ் இல்லா புதுச்சேரி' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

 

இதில் பங்கேற்ற நடிகை குஷ்பு, “முதலமைச்சர் நாராயணசாமி, ஏன் புதுச்சேரியை இப்படி மாற்றி வைத்துள்ளீர்கள்? காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், லஞ்சம், ரேஷன் கடை மூடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை, 60% பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 57% போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொடுக்காமல் ஆளுநர் மீது குறைகூறி வருகிறார் நாராயணசாமி.

 

எதிர்க்கட்சியினர் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேல் ஜாதிக்கு மட்டும் தான் பா.ஜ.க முக்கியத்துவம் அளிக்கிறது என்கிறார்கள். கேரளாவில் 21வயது பெண் சேர்மேனாக பதவி ஏற்றது வரவேற்கத்தக்கது. ஆனால் பன்டளம் நகரசபை பெண் சேர்மேனாக சுசிலா சந்தோஷ் (தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்), என்பவரை பொதுத் தொகுதியில் நிற்க வைத்து, ஜெயிக்க வைத்து அழகு பார்த்த கட்சி பா.ஜ.க.


தி.மு.க, காங்கிரஸ் ஜாதி அடிப்படையில் மாவட்டத் தலைவரை தேர்வு செய்கிறீர்கள். இது ஜாதி அரசியல் இல்லையா. ஜாதி, மதம் பார்த்து அரசியல் செய்வது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தான்.  நான் தி.மு.கவில் தான் அரசியல் பயணத்தை தொடங்கினேன். கலைஞர் சொன்ன விஷயம் யாரையும் தகாத வார்த்தையால் பேசக்கூடாது என்பது. ஜெயலலிதாவைகூட அம்மையார் ஜெயலலிதா என்றுதான் பேச வேண்டும் எனச் சொன்னார். 


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மரியாதையாக ஸ்டாலின் என அழைக்கிறார். ஆனால் ஸ்டாலின், எடுபுடி முதலமைச்சர் எனப் பேசுகிறார். உதயநிதி ஸ்டாலினை தி.மு.கவில் புரொமோட் செய்கிறார்கள். தமிழகத்தில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்க மறுத்தபோது காவலரைப் பார்த்து 'உங்க பேர் என்ன?' என்றும் 'எனக்கு எல்லாம் தெரியும்' என்றும் அந்த போலீஸாரை மிரட்டுகிறார் உதயநிதி. தாத்தா எங்கே? பேரன் எங்கே? நல்ல திட்டங்களைச் செய்ய முடிந்தால் செய்யுங்கள்.

 

தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் என்ன லாபம் வருகிறது என்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் ஆட்சியைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், காங்கிரஸ், தி.மு.க. பேசவே கூடாது. காங்கிரஸ், தி.மு.கவிற்கு பயம் வந்துவிட்டது. வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி உறுதி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.கவின் வெற்றி காத்திருக்கிறது.

 

cnc

 

திராவிடம், பகுத்தறிவு எனக் கூறுகிறீர்கள். ஆனால், தினமும் உங்கள் இல்லத்தில் பெண்கள் பூஜை செய்கிறார்கள். நீங்கள் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை மனசாட்சியையும் ஏமாற்றி வாழ்கிறீர்கள். மனசாட்சிக்குப் பயந்து பா.ஜ.க.வினர் வாழ்ந்து வருகிறோம்.
 

வாழ்க்கையை மேம்படுத்த, பெண்களைப் பாதுகாக்க பா.ஜ.கதான் தேவை. பா.ஜ.க இருந்தால்தான் தலை நிமிர்ந்து வாழமுடியும். இல்லை என்றால் அடிமையாகத்தான் வாழ வேண்டும். இதுதான் ஆரம்பம். வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக மீண்டும் புதுச்சேரிக்கு வருவேன்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.