கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. இதில் 239 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 643 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,574, தமிழகத்தில் 911, டெல்லியில் 903, ராஜஸ்தானில் 553, தெலங்கானாவில் 473, கேரளாவில் 364, ஆந்திராவில் 363, கர்நாடகாவில் 207 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், நற்பணிகள் குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது, திமுக எப்போதும் மக்களுக்குத் துணையாக இருந்திடும் என்பதை களத்தில் கழகத்தினரின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளன. மக்களின் உயிர்தான் முதன்மையானது; கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் பணிகளைத் தொடர்வோம் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துக்கு நடிகையும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், "இது சமிஞ்சையா?... நீங்கள் எப்போது அமைதிக்கான செய்தியை எழுதுகிறீர்களோ, அப்போது உங்களைப் பின்தொடர்பவர்கள் முற்றிலும் மாறுபடுகின்றனர். அவர்கள் அரசோடு ஒத்துழைக்காமல் முரட்டுத்தனமாக எந்த ஆதாரமும் இன்றி அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர் . மேலும் உங்கள் மீடியா உட்பட பலரும் பீலாராஜேஷை குறிவைத்து செய்தி வெளியிடுகின்றனர். அவர்கள் வேலை செய்பவர்களை மதிப்பதில்லை. உண்மையிலேயே அரசுக்கு ஒத்துழைத்தால் அது மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். நடிகை காயத்ரி ரகுராமின் இந்தக் கருத்துக்குத் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.