Skip to main content

வைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா?” - வாகை சந்திரசேகர் ஆவேசம்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
toll

 

சுங்கச்சாவடியில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரியை மரியாதை குறைவாக பேசியதோடு, காவல்துறை அதிகாரியை தள்ளிவிடுகிறார் முன்னாள் எம்.பி. அர்ஜுனன். பதிலுக்கு காவல்துறை அதிகாரியும் அர்ஜுனனை தள்ளிவிடுகிறார். பின்னர் கோபமடைந்த அந்த அர்ஜுனன், காவல்துறை அதிகாரியை காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் காவல்துறையினரை மரியாதை குறைவாக பேசி, தாக்கியது 'நடிகர் வாகை சந்திரசேகர்' என பதிவிடப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவுக்குக் கீழே, ''இந்தப் பதிவை போட்டவர் சந்திரசேகரை பார்க்கவில்லை. தி.மு.க.வை குற்றம் சொல்லும் நோக்கம் மட்டுமே இருக்கிறது என்றும் அது சந்திரசேகர் கிடையாது, தற்போது அவரது முகத்தையும், குரலையும் தமிழ் மக்கள் நன்றாக அறிவர், அது தெரிந்தும் இங்கு சிலர் ஒன்னும் தெரியாது போல் தி.மு.க.-வை திட்டி வருகிறார்கள். இது நாட்டுப் பற்று அல்ல. தி.மு.க. மீது உள்ள பகை'' என வாகை சந்திரசேகருக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

மேலும், ''போலீஸ் இந்த மாதிரி ஆட்களை ஸ்டேஷனுக்கு ஏன் கொண்டுபோகவில்லை. இதே ஏழை எளிய மக்களாக இருந்தால் வேறு முறையில் இறங்கி இருப்பார்கள். போலீஸ்களுக்கு இது தேவைதான் ஒரு ஏப்பை சப்பை கிடைத்தால் எவ்வளவு ரவுடித்தனம் பண்ணுகிறீர்கள். இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்'' என்றும் ''வீடியோவில் இருப்பது அ.தி.மு.க.-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன்'' என்றும் பதிவுகள் நீண்டு கொண்டே போகிறது. 

 

vagai chandrasekar mla

 

இதுதொடர்பாக நாம் நடிகர் வாகை சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது, “கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு இல்லாமல், குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் அதிலிருந்து மீண்டு வர மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சாத்தான்குளம் சம்பவம் மனதை விட்டு நீங்காமல் உள்ளது. ஜெயராஜ் மனைவியும், பென்னிக்ஸ் தாயாருமான செல்வராணி, ஜெயராஜ் மகளின் அழுகுரல் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.

இதுபோன்ற அதிர்ச்சியான சம்பவங்களால் மக்கள் வேதனையில் இருக்கும்போது, இதனை ஒரு செய்தியாக ஆக்க நான் விரும்பவில்லை. என்னை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். என்னுடைய தொகுதியான வேளச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள். 40 ஆண்டுகாலமாக கலைத் துறையில் இருக்கிறேன். அரசியலில் தி.மு.க.-வில் இணைந்து ஒரே இயக்கத்தில் பணியாற்றி வருகிறேன். இதுபோன்ற செய்திகள், போலிப் பதிவுகள் என்னுடைய கலை வாழ்க்கையை, பொதுவாழ்க்கையை நிச்சயம் பாதிக்காது.

தி.மு.க. மீது இருக்கும் நல்ல பெயரை கெடுக்க இதுபோன்ற அவதூறுகளை சிலர் தொடர்ந்து பரப்புகிறார்கள். தி.மு.க. தலைவரும், தி.மு.க.-வினரும் சிறப்பாக பணியாற்றுவது அவர்களுக்கு பொறுக்கவில்லை. அரசியலில் நாகரீகமாக கருத்து தெரிவித்து, அதற்கு எதிர்க்கருத்துத் தெரிவித்து மோத வேண்டும். அதைவிட்டுவிட்டு இதுபோன்ற அவதூறுகளை பரப்பி தி.மு.க.-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது எனக்கு ஏற்பட்ட அவமானமாக பார்க்க மாட்டேன். தி.மு.க.-வை இழிவுப்படுத்தும் நோக்கில் செய்துள்ளார்கள். ஆகையால் தி.மு.க. தலைவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாங்கள் இதனை சட்டப்படி சந்திக்க உள்ளோம்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.