Skip to main content

நடிகர் சரத்குமார் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்து 

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

 

காமராஜர் பிறந்தநாளில் அவர் பிறந்த  மண்ணில் சரத்குமார் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள “காமராஜர் மணிமண்டபம்” திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 
 

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தலைவர் பிறந்த மண்ணில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் - இடையறாமல் அவர் ஆற்றிய பொதுப் பணிகளுக்கும், நாட்டின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும்  ஆற்றிய தொண்டறத்திற்கும், பொதுமக்களின் உற்ற, நெருக்கமான, நயத்தகு நண்பராக, வழிகாட்டியாக, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தொடர்ந்து செய்த தன்னலமற்ற சேவைகளுக்கும், நன்றி பாராட்டுவதாக அமையும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீரிய முயற்சியைத் துவங்கி - வெற்றியடைந்துள்ள சகோதரர் சரத்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுதலையும், போற்றுதலையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
 

actor sarathkumar mk stalin


 

முதன்முதலாக பெருந்தலைவர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலிருந்த சென்னை மாநகராட்சிக்கு உண்டு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு முதல்வராக இருந்த போது நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தி, அந்தமாநாட்டைத்  தொடங்கி வைத்தவர்  பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.   குமரிக் கடற்கரையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தலைவர் கலைஞர் அவர்கள்,  கர்மவீரர் காமராஜருக்கு ஏற்றமிகு மணி மண்டபத்தை எழுப்பியிருக்கிறார். சென்னை கடற்கரை சாலை, மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் ஆகியவற்றுக்கு, பெருந்தலைவரின் பெயர் சூட்டி மகிழ்ந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
 

இதே விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியதும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜர் அவர்களின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்" என்று பெயர் சூட்டியதும்  தலைவர் கலைஞர் அவர்கள் ஆவார்கள். கழக அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு"  சிவகாமி அம்மையார் அவர்களின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார் கலைஞர். அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் 2006 சட்டமன்றத் தேர்தலின் போது, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காமராஜர் பிறந்த ஜூலை 15ஆம் தேதியைக் கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுப்போம்" என வாக்குறுதி அளித்து - அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆட்சிப்  பொறுப்பேற்றவுடன் ஜூலைத் திங்கள் 15ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அறிவித்து, கழக ஆட்சியில் 24.5.2006 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டது. அந்தக் கல்வி நாள், எதிர்காலத்தில் மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அந்த அரசு ஆணையை, சட்டமாகவே நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திடக்  கடமைப்பட்டுள்ளேன்.


 

“அனைவரும் கல்வி கற்க வேண்டும்" என்ற பெருந்தலைவரின் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், முதல் கல்வி வளர்ச்சி நாளான 15.7.2006 அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காமராஜர் அவர்களின் திருவுருவப் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு, பேச்சு, கட்டுரை ஓவியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு- அந்த விழாவில், 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம் கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது ஆண்டுக் கல்வி நாளான 15.7.2007 அன்று  “சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டமும்",  3வது ஆண்டுக் கல்வி நாளான 15.7.2008 அன்று “முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டமும்" அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே பள்ளி மாணவர்களுக்கு உண்மையான ஊட்டச்சத்து வழங்கும் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழுக்கு மேலும் புகழையும் பெருமையையும் சேர்க்கும் அடுக்கடுக்கான காரியங்களை தலைவர் கலைஞர் அவர்கள் மிகுந்த களிப்புடன் நிறைவேற்றினார்.


 

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மணி மண்டபம் -  பெருந்தலைவர் அவர்களின் பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை
 

ஆகிய நற்பண்புகளையும், தமிழகத்திற்கும், இந்திய முன்னேற்றத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளையும் - அடுக்கடுக்கான சாதனைகளையும் இளைய தலைமுறையினருக்கு எந்நாளும் நினைவூட்டும் நேர்த்தியான அடையாளமாக விளங்கிடும் என்று இந்த நல்ல நேரத்தில் உவகை கொள்கிறேன்; வாழ்த்துகிறேன்! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.